“அலர்ட்”.. எஸ்சி, எஸ்டிதான் பாஜக “டார்கெட்”.. அந்த விசயத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மோசம் - திருமா
காஞ்சிபுரம்: தமிழகத்தில்தான் அம்பேத்கர் சிலை அவமரியாதை செய்யப்படுகிறது என்பது தனக்கு வருத்தம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்து இருக்கிறார்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம கூட்டு சாலையில் காஞ்சிபுரம் வடக்கு ஓன்றிய விடுதலை சிறுத்தைகள் கிளை சார்பாக ஆள் உயர அம்பேத்கர் அமைக்கப்பட்டது
இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் இளமாறன் தலைமையில் அம்பேத்கர் சிலையின் திறப்பு விழா நடைபெற்றது.
பாஜக ஒரு பிஸினஸ் கட்சி.. வெறுப்பை பரப்பி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.. விளாசிய ராகுல் காந்தி

அம்பேத்கர் சிலை திறப்பு
இந்த விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான திருமாவளவன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையினை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த சிலையை அமைக்க செயல்பட்ட 22 பேருக்கு அம்பேத்கர் சிலை வழங்கி வாழ்த்தினார்.

திருமாவளவன் வேதனை
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "கடந்த 15 ஆண்டுகளாக இந்த அம்பேத்கர் சிலையை அமைக்க பாடுபட்டனர். இந்த நிலையில் இந்த சிலையை திறப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே அம்பேத்கரின் சிலையை அமைப்பது மிகப்பெரூம் சவாலாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மோசம்
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதையும் செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டில் புதிய அம்பேத்கர் சிலைகளை அமைக்க இன்று வரை பெரும் சிரமம் ஏற்படுகிறது. பிற மாநிலங்களில் அம்பேத்கர் சிலைகள் பல இடங்களில் வைக்கப்படுகின்றன.

பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள்
சட்டமன்ற, நாடாளுமன்ற வளாகத்தில் பிரம்மிக்க வைக்கும் வகையில் அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளன. அம்பேத்கர் என்பவர் ஒரு மடத்தின் மடாதிபதி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். அம்பேத்கர் மற்றும் பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள்.

பட்டியலின மக்கள் குறி
தற்போது தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களை குறி வைத்து பாஜக செயல்படும் நிலையை கண்டு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நவம்பர் 6 ஆம் தேதி அமைதி அறப்போர் என்கிற வகையில் மனு ஸ்ருதி குறித்து பொதுமக்ள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பேடு வழங்க உள்ளது." என்று தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் விசிக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன் , காஞ்சி மண்டல செயலாளர் விடுதலைசெழியன் , மாவட்ட ஓருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் , மக்கள் மன்றம் நிர்வாகிகள் மகேஷ், ஜெர்சி, விசிகவை சேர்ந்த இந்திரா அம்பேத்கர்வளவன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின் , பருத்தி குளம் சேகர் , ஏரிக்கரை டேவிட் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கீழ்கதிர்பூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.