திமுக அணி 40/40 வெற்றி; எடப்பாடி திட்டமே வேற! கற்பனை உலகில் பாஜக!
சென்னை: திமுக கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் 40/40 தொகுதிகளில் வெற்றி பெறும் என மூத்த பத்திரிகையாளர் மணி கூறி இருக்கிறார்.
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

வழக்கம் போல திமுக தலைமையிலான அணி பலமாக உள்ளது. அதிலிருந்து ஐஜேகே மட்டுமே பாஜக பக்கம் அணி மாறி உள்ளது. அந்தக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் வாக்கு வங்கியே கிடையாது. அது ஒரு லெட்டர் பேட் கட்சி என்ற அளவில்தான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐஜேகே திமுக அணியிலிருந்து வெளியேறினாலும் அந்த இடத்தை நிரப்ப அதைவிடப் பலமான கட்சியான மநீம இடம்பெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவும் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக அணியில் தற்போதைக்கு எஸ்டிபிஐ மற்றும் தமீமும் அன்சாரி கட்சியும் உள்ளன. அதை வைத்து திமுகவுடன் மோதுவது முடியாத காரியம்.
இதனிடையே பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்கிறார்கள். அதில்தான் பாமக, தேமுதிக, அமமுக, ஒபிஎஸ், ஐஜேகே, ஜான் பாண்டியன், சசிகலா, ஒபிஎஸ் எனப் பலரும் இணைய இருக்கிறார்கள் என்கிறார்கள்.
ஆகவே, இந்த 2024இல் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2வது இடத்தில் பாஜக வர வேண்டும் எனத் திட்டம் போடுகிறது. மேலும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் நாங்கள் 2வது கட்சி எனக் காட்டத் திட்டம் தீட்டி வருகிறது எனப் பேச்சுகள் வலம் வருகின்றன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 57% வாக்குகள் கிடைத்தன. 38 இடங்களும் கிடைத்தன. அதிமுக கூட்டணிக்கு 23% வாக்குகளைப் பெற்றது. ஒரு இடத்தில் மட்டுமே இந்தக் கூட்டணி வென்றது.
அப்படிப் பார்த்தால் திமுக கூட்டணியின் வாக்கு வங்கி சேதம் இல்லாமல் அப்படியே உள்ளது.
ஆனால், அதிமுகவின் ஓட்டு வங்கி உடைந்துவிட்டது. ஒபிஎஸ் அணி வெளியே சென்றுவிட்டது. அந்த அணிக்கு 1% வாக்கு வங்கி இருக்கலாம். டிடிவி தினகரன், சசிகலா இல்லை. அது ஒரு 1% ஓட்டுகளைப் பிரிக்கும். தேமுதிக, பாமக கூட இல்லை. ஆக, கடந்த தேர்தலில் 23% என்றால், அது இந்த முறை 15% வாக்குகளை அதிமுக பெறலாம்.

அப்படிப் பிரிக்கப்படும் வாக்குகள் நேரடியாக பாஜகவுக்குக் கூட்டணிக்கு மட்டுமே போகாது. 4வது அணியாக நாம் தமிழர் கட்சி அணி உள்ளது. அது தனித்து நிற்கிறது. அவர்களும் வாக்குகளைப் பிரிப்பார்கள்.
ஆக, பாஜக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என பாண்டே கூட கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளார். அது சாத்தியமில்லை. பல ஊர்களில் பாஜகவில் ஆட்களே இல்லை. இதுவரை வேட்பாளர்களே கிடைக்காமல் அந்தக் கட்சி தள்ளாடி வருகிறது. அந்தக் கட்சி அதிமுகவை 3 இடத்துக்கு நகர்த்தும் என்பது கற்பனை என்கிறார் பத்திரிகையாளர் மணி.

பாண்டே கருத்துக்கு மாறாகப் பத்திரிகையாளர் மணி, திமுக இந்தத் தேர்தலில் பாண்டிச்சேரி தொகுதியையும் சேர்த்து 40/40 இடங்களில் வெல்லும் என்று கூறியுள்ளார்.
இது பற்றி மணி, "2014இல் லேடியா? மோடியா? என்ற முழக்கத்தை முன்வைத்து ஜெயலலிதா 38 இடங்களில் வென்றார். 2019இல் மோடி எதிர்ப்பை காட்டி திமுக 39 இடங்களில் வென்றது. இந்த முறை திமுக கட்டாயம் 40/40 தொகுதிகளில் வெற்றிபெறும்.

எனக்கு திமுகவைப் பிடிக்கவில்லை என்றாலும் நான் யாருக்கு ஓட்டுப் போடுவேன்? எனக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. திமுகவுக்குத்தான் போட்டாக வேண்டும். அப்படி இல்லை என்றால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கத்தான் வேண்டும்.
பாஜக வெற்றி பெறாது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதிமுகவை 5 தொகுதிகளில் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது இடத்தில் பாஜக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

2019இல் இருந்த அதிமுக கூட்டணி அப்படியே இந்த முறையும் தொடர்ந்திருந்தால் திமுக திணறி இருக்கும். ஆனால், அந்தநிலை இப்போது இல்லாதது திமுகவுக்குச் சாதகமாக மாறி இருக்கிறது. இந்தக் கணக்கு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். ஆகவே, அவர் இந்த மக்களவைத் தேர்தலைப் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அவரது இலக்கு 2026 சட்டசபைத் தேர்தல் தான்.
மக்களவையில் இப்போது அதிமுக வென்றாலும் அவர்களால் பெரிய அளவில் அதை வைத்து நாடாளுமன்றத்தின் ஒன்றுமே சாதிக்க முடியாது. மீண்டும் பாஜகவை ஆதரித்தால், சட்டசபைத் தேர்தலின்போது அதற்கான விலையை எடப்பாடி கொடுக்க வேண்டியது வரும். அதை எல்லாம் அவர் உணர்ந்தே காய் நகர்த்தி வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால், திமுகவை எதிர்த்து பணபலத்துடன் மோத வேட்பாளர்கள் எடப்பாடியிடம் இல்லை. பலரும் தயங்குகிறார்கள். தேவையில்லாமல் பணத்தைச் செலவு செய்து தோல்வியைத் தழுவ வேண்டாம் என ஒதுங்குகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அதற்காகவும் தான் மவுனம் காத்து வருகிறார். பாஜகவுடன் ஒருவேளை இருந்திருந்தால் பணம் ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது.

அதிமுகவுக்கு மத்தியில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற கனவு பெரிய அளவில் எப்போதும் இருந்ததில்லை.
ஆனால், திமுகதான் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்யும். விபிசிங் அமைச்சரவையோ அல்லது ஐகே குஜரால் அமைச்சரவையோ அப்படி இல்லை என்றால் வாஜ்பாய் அமைச்சரவையோ அதைத்தாண்டி காங்கிரஸ் அமைச்சரவையோ அதில் எல்லாம் தொடர்ந்து திமுக இருந்துவருகிறது.

ஏறக்குறைய 14 ஆண்டுகள் அணிகள் மாறினாலும் மத்தியில் திமுக அதிகாரத்திலிருந்துள்ளது.
இதில் உள்ள பல கட்சிகளுக்கு வேறு வேறு கொள்கைகள். அத்தனைக் கொள்கை மாறுபாடு உள்ள கட்சிகளுடன் திமுக தொடர்ந்து கூட்டணியிலிருந்துள்ளது.

இதில் அதிமுக முன் உள்ள சவால் என்னவென்றால், மோடி மீண்டும் பிரதமர் ஆனால் அதிமுகவை விட்டு வைக்க மாட்டார். எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து பலர் மோடி பக்கம் போகலாம். அதிமுகவை பாஜக கொஞ்சம் கொஞ்சமாகக் கரையலாம்.

ஆனால், திமுக அப்படி இல்லை. மோடி எதிர்ப்பு என்பதில் உறுதியாக உள்ளது. அக்கட்சியுடன் உள்ள கூட்டணிக் கட்சிகளும் அதே கொள்கையுடன் உறுதியாக உள்ளன. ஆகவே, அதை உடைக்க மோடி முயல மாட்டார். அதை உடைத்தாலும் அதில் உள்ளவர்களை மோடி ஆதரவாளர்களாக மாற்றுவது கடினம்" எனக் கூறியிருக்கிறார்
-
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
ஆளுநர் ரவி இடமாற்றம் செய்யப்பட்டது திமுகவிற்கு நிச்சயம் சவாலானது.. அரசியல் விமர்சகர்கள் கூறுவது என்ன? -
"திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் எதிர்பார்க்கிறோம்".. கமல்ஹாசன் சொன்ன சேதி! -
காமராஜரின் முதல் தோல்வி.. அண்ணாவின் கடைசி வெற்றி.. மறக்க முடியாத 1967 சட்டசபை தேர்தல்! -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
Rajya sabha: அன்புமணி வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு.. பரிசீலனையின்போது பரபர! -
1,000 மாடல் பள்ளிகள், 7 லட்சம் வீடுகள், தொழில்பூங்கா! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அம்ச அறிவிப்பு -
“திருச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் முதல்வர் ஸ்டாலின்”.. கேஎன் நேரு கொடுத்த அப்டேட்! -
அதிமுக vs திமுக.. தொழில் துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி என்ன? டேட்டாவுடன் வந்த டிஆர்பி ராஜா! -
தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்.. 59 ஆண்டுகள் முன் அண்ணா ஆட்சிக்கு வந்த வரலாறு












Click it and Unblock the Notifications