அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..40 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு! ஆரத் தழுவி மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த 60-க்கும் மாணவர்கள், அதேபள்ளியில் நேரில் சந்தித்து, தங்களது பழைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இணைந்து படிக்கும் மாணவ, மாணவிகள் படிப்பு முடிந்து பிரிந்து சென்றாலும், அந்தக் காலக்கட்டங்களில் ஏற்படும் பசுமையான நினைவுகள், எப்போதும் அவர்கள் மனதை விட்டு அகலாமல் இருக்கும்.
திடீரென பழைய மாணவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால், தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு மகிழ்வார்கள். இதற்காக முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி, சில பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ தேசிய கருத்தரங்கம்.. தமிழக எம்பிக்கள் பங்கேற்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 1981-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பழைய மாணவர்களை வாட்ச் அப் மூலம் ஒருங்கிணைத்த ஆசிரியர் விக்டர் தேவராஜ் என்பவர் இதற்கு தலைமை வகித்தார்.
உயர் பதவியில் மாணவர்கள்
இந்த நிகழ்ச்சிக்கு, பழைய மாணவர்களான பல்லாவரம் வட்டாட்சியர் ராஜேந்திரன், காவல்துறையில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் வேலு ஆகியயோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் அர்ச்சகர் காமேசுவர குருக்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். இதனையடுத்து, அந்தக் காலக்கட்டங்களில் தங்களுடன் உடன்படித்த, இறந்த நண்பர்களுக்கு, அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.
ஆர்வமுடன் கலந்துரையாடல்
பள்ளியில் பயின்று தற்போது செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியராக பணிபுரிந்து வரும் இப்ராஹிம் உட்பட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் ஆர்வமுடன் கலந்துரையாடிடனர். பின்னர், தாங்கள் படித்தபோது, ஆசிரியர்களிடம் இருந்த நற்குணங்கள், தற்போது இருக்கும் நிலைமை, பணிபுரியும் இடம், பதவி ஆகியவைகள் குறித்தும், தங்களது அனுபவங்கள் குறித்தும் ஒருவொருக்கொருவர் ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டனர்.
உதவி கரம் நீட்ட முடிவு
நிகழ்சியின் நிறைவாக, சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், உயர் பொறுப்பில் இருப்பவர்கள், பழைய மாணவர்களின் குழந்தைகள் வேலை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு வேலை வாங்கித் தர முயற்சிப்பது, நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வழங்குவது என்பன உள்ளிட்டவற்றை வருங்காலங்களில் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், அனைத்து முன்னாள் மாணவர்களும் பிரியா விடை பெற்றனர்.