ஆனானப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையே பாதிக்கும் அளவுக்கு மின்வெட்டு.. ஐசியு நோயாளிகள் தவிப்பு!
சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மின்வெட்டு பிரச்சனையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவற்றில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பரவலாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் ஏற்பட்டு வருகின்றன. சென்னையின் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான பெருங்குடி அப்பல்லோ மருத்துவமனையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த திடீர் மின்வெட்டு காரணமாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ICU-வில் இருந்த நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 மணி நேர மின்வெட்டு
மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக எப்போதும் 'பவர் பேக்கப்' மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் தயார் நிலையில் இருப்பது வழக்கம். ஆனால், பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகமே இருளில் மூழ்கியதுடன், குளிர்சாதன வசதிகளும் முழுமையாக முடங்கின.
நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்?
மின்சாரம் இல்லாததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவக் கருவிகளின் இயக்கம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சில நோயாளிகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளாகத்தில் வெடித்த போராட்டம்
தங்கள் உறவினர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த நோயாளிகளின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, மருத்துவமனை வளாகத்திற்குள் திரண்ட உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்களது கடும் கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அப்பல்லோ மருத்துவமனையிலேயே
தமிழகத்தின் தலைசிறந்த கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ஒன்றாகக் கருதப்படும் அப்பல்லோவிலேயே, அவசர கால மின்சார மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் 2 மணி நேரம் மின்வெட்டு நீடித்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"ஆனானப்பட்ட அப்பல்லோ மருத்துவமனைக்கே இந்த நிலைமையா? மக்களின் உயிர் என்ன அவ்வளவு மலிவானதா?" என சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications