பல நாளாக துர்நாற்றம் வீசிய கழிவுநீர் தொட்டி.. சுத்தம் செய்ய முன்வந்த 2 இளைஞர்கள்.. பரிதாபமாக மரணம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய களம் இறங்கிய 2 இளைஞர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் பல நாட்களாக துர்நாற்றம் வீசி வந்தது. இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் உள்ளே இறங்கி சுத்தம் செய்ய முயன்றார்.

இதனால் அவர் விஷவாயு தாக்கி உள்ளேயே மயங்கி விழுந்தார். இதனை கண்ட சுனில் என்ற இளைஞரும் கழிவு நீர் தொட்டியினுள் இறங்கியுள்ளார். ஆனால் அவரும் விஷவாயு தாக்கி தொட்டிக்கு உள்ளேயே மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து விஷவாயு தாக்கி இருவரும் மயங்கி உள்ளே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சரியான பாதுகாப்பு ஏற்பாடுடன் இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டனர்.
இருவரும் அப்போது உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தியால்பேட்டை பகுதியில் நகராட்சி ஊழியர்கள், முறையாக கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்திருந்தார்.2 அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு தான் இருவரின் உயிரையும் பறித்துள்ளது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications