பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் பேரணி தற்காலிக வாபஸ்..அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம்: காப்போம் காப்போம் விவசாய நிலங்களை காப்போம் என்று முழக்கமிட்டபடி பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் பேரணி, பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டது. அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்ட குழுவினர் போராட்டத்தை கைவிட முடிவு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் இரண்டாவது விமான நிலையமான, பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் புதிதாக அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து 145 வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராமத்திலிருந்து இந்த புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நிலம் எடுப்பு பணிகளை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி டிசம்பர் 19ஆம் தேதி கிராம உரிமை மீட்பு பேரணி நடைபெறும் என பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கிராம போராட்ட குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு..கறுப்புக்கொடியுடன் 13 கிராம மக்கள் பேரணி..போலீஸ் குவிப்பு
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு
இதனை அறிந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் போராட்ட குழுவினருடனான பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கிராம மக்களின் எதிர்ப்பு குறித்து தமிழக அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் நாளை நடைபெறும் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்ட குழுவிடம் கேட்டுக்கொண்டார்.
கிராம உரிமை மீட்பு குழுவினர்
இருப்பினும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பின்னர் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கிராம போராட்ட குழுவினர் நாளை நடைபெறுவதாக அறிவித்த கிராம உரிமை மீட்பு பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் சந்திக்க தயாராக உள்ளதாகவும் கிராம மக்கள் சார்பில் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கிராம போராட்ட குழுவைச் சேர்ந்த இளங்கோ கூறுகையில், தொடர்ந்து பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் விளைநிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தொடர்ச்சியாக தமிழக அரசை வலியுறுத்தி வரும் நிலையில், நாளை நடைபெறும் இந்த நடைப்பயணம் போராட்டத்தை கைவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதும், அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தாக கூறினார்.
போலீஸ் குவிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அன்னூர் பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி விளைநிலங்கள் எடுக்கப்படாது என தெரிவித்த நிலையில், பரந்தூரில் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினர். விமான நிலையம் அமைக்க நீர்நிலைகள், விளைநிலங்களை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்து கண்டிப்பாக நடைப்பயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்களது கோரிக்கையை நேரடியாக அளிப்போம் என அவர் தெரிவித்தார். போராட்டக்குழுவினர் உறுதியாக பேரணி நடைபெறும் என்று அறிவித்ததை அடுத்து ஏகனாபுரம் கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டது.
கைவிட வலியுறுத்தல்
இந்நிலையில் இன்று பரந்தூர்,ஏகனாபுரம் உள்ளிட்ட 13கிராம மக்கள் இந்த புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நிலம் எடுப்பு பணிகளை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம உரிமை மீட்பு பேரணி நடைபெறுகிறது.
நேற்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,மாவட்ட எஸ்.பி.சுதாகர் ஆகியோர் இந்த நடைப்பயண பேரணியை கைவிடுமாறு போராட்ட குழுவினரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று இந்த பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 13கிராம மக்களின் நடைப்பயண பேரணி நடைபெறுவதால் காஞ்சிபுரம், திருவள்ளூர்,ராணிப்பேட்டை,வேலூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் குவிப்பு
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரு நுழைவு வாயில்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அலுவலகத்திற்கு வரும் அரசு பணியாளர்களின் அடையாள அட்டை,உடமைகள் போன்றவற்றை சோதனை செய்தப்பிறகு அவர்களை போலீசார் உள்ளே அனுமதித்து வருகின்றனர். அதேபோல் பரந்தூர் சந்திப்பு, ஏகனாபுரம் சந்திப்பு,ஏகனாபுரம் மற்றும் ஏற்கனவே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனைச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவ்வழியே வருபவர்களையும்,வெளியே செல்லுபவர்களை போலீசார் சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் அதி விரைவு போலீஸ் படையினரும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கறுப்புக்கொடி ஏந்தி பேரணி
மேலும் ஏகனாபுரத்திலுள்ள போராட்ட குழுவினரிடம் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.சுதாகர் இந்த நடைப்பயண பேரணியை கைவிடுமாறு வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் அம்பேத்கர் சிலை முன்பு கறுப்புக் கொடி ஏந்தியும் கருப்புத் துணியால் வாயை மூடியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பேரணி தற்காலிக நிறுத்தம்
இதனிடையே பேரணியாக சென்றவர்களுடன் மாவட்ட எஸ்.பியும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சருடன் நாளைய தினம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவினர், எங்களுடைய ஒரே கோரிக்கை பரந்தூர் விமான நிலைய பணிகளுக்கு நிலம் கையக்கப்படுத்துவதை கை விட வேண்டும் என்பதுதான். அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும். அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் போராட்டக்குழுவினர் உறுதியாக தெரிவித்தனர்.