ஏமாந்து போன பரந்தூர் கிராம மக்கள்.. ரசிகர்களிடம் மட்டும் பேசி சென்ற விஜய்!
காஞ்சிபுரம்: பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களை சந்திக்க சென்ற விஜய், மக்களை சந்திக்காமல் ரசிகர்களை மட்டும் சந்தித்துவிட்டு சென்றுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மண்டபத்திற்கு வரவழைத்து விட்டு, மண்டபத்திற்குள் செல்லாமல், வெளியே நின்றிருந்த தனது ரசிகர்களிடம் மட்டும் பேசிவிட்டு விஜய் சென்றிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் விமான நிலையங்கள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்-யும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்திக்க போவதாகவும் கூறியிருந்தார்.
எனவே, பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள வீனஸ் திடலில் போராட்டத்தில் 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கூடியிருந்தனர். ஆனால் விஜய் மண்டபத்திற்குள் செல்லாமல் வெளியில் கூடியிருந்த ரசிகர்களுடன் வண்டியில் நின்றிருந்தவாறு உரையாடினார். அவர் மண்டபத்திற்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் உள்ளே வராமல் அப்படியே புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் கிராம மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய விஜய், "உங்களுடைய போராட்டம் 900 நாட்களை கடந்து நடந்துக்கொண்டிருக்கிறது. போராட்டம் குறித்து சிறுவன் ராகுல் பேசியது மனதை ஏதோ செய்துவிட்டது. விவசாயிகளுடைய காலடி மண்ணை தொட்டுதான் நான் எனது கள பயணத்தை தொடங்க நினைத்திருந்தேன். அந்த வகையில், இன்று எனது கள பயணம் தொடங்கியிருக்கிறது. இந்த பயணம் இப்போது முடிவு செய்தது கிடையாது. என்னுடைய முதல் மாநாட்டில் விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை குறித்து தீர்மானம் போட்டிருந்தேன்.
அதில் பரந்தூர் பகுதியில் 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தர வெள்ளக் காடாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இப்படியான போராட்டத்தில் நான் பங்கேற்பதன் மூலம், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. ஆனால் இந்த இடத்தில் விமான நிலையம் வரக்கூடாது. விவசாயிகளுக்காக சட்டப்போராட்டம் கூட நடத்த நான் தயங்க மாட்டேன்.
இந்த அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது, 8 வழிச்சாலை, காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளிட்டவற்றை எதிர்க்கத்தானே செய்தீர்கள்? ஆனால் விமான நிலையத்திற்கு மட்டும் எதற்கு ஆதரவு? இதற்கு எதிராகவும்தான் திட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications