ஏரி ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் ராஜா.. பாக்கம் நெடுஞ்சாலையில்.. பெட்ரோல் குண்டு வீச்சு
மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சமூக ஆர்வலர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் ஒரு சமூக ஆர்வலர். அரசு புறம்போக்கு நிலம், அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்கள், ஏரி குளங்களை ஆக்கிரமிப்போருக்கு எதிராக சட்டப் போரில் ஈடுபட்டுள்ளவர். இதனால் இவருக்கு எதிரிகள் ஜாஸ்தி.
வழக்குகளுக்காக அடிக்கடி சென்னை வந்து செல்வார். இந்த நிலையில் சென்னையில் வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்குப் போய் விட்டு ஊர் திரும்பினார். இன்று காலை பாக்கம் நெடுஞ்சாலையில் அவர் வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் திடீரென குறுக்கிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியது.
இதில் அதிர்ஷ்டவசமாக ராஜா மீது குண்டு படாமல் தள்ளிப் போய் விழுந்து வெடித்துச் சிதறியது. காயமின்றி உயிர் தப்பினார் ராஜா. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வீசிய கும்பல் தப்பி ஓடி விட்டது. விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து குண்டு வீச்சில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் மீதான இந்த தாக்குதலால் இதுபோன்ற சமூகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.