"பொள்ளாச்சி கள்ளக் கூட்டணி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது"! அதிமுகவுக்கு எதிராக திமுக போஸ்டர்
காஞ்சிபுரம்: மாசம் ஆயிரம் கொடுத்து அரசு படிக்க வைக்குது' பொள்ளாச்சி கள்ளக் கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது என காஞ்சிபுரத்தில் திமுக அரசுக்கு ஆதரவான போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தை அரசியலாக்கி வரும் அதிமுக, பாஜகவை கண்டிக்கும் விதமாக இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் படங்கள் இடம் பெற்றிருந்தன.

அதில், ''மாதம் 1000 கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது... பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது'' சேவ் கேல்ஸ் எஜிகேசன் (SaveGirlsEducation) என ஒட்டப்பட்டிருந்தது.
கீழ் பகுதியில் தமிழ் நாடு மாணவர் மன்றம் மாணவியர் பிரிவு என்ற பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாநகரில்பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவில்கள் அருகே, உணவகம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மாணவி தனது புகாரில், "ஞானசேகரன் தன்னிடம் யாரோ ஒரு சாரிடமும் படுக்கையை பகிர வேண்டும்" என மிரட்டினான் என கூறியதாக தெரிகிறது.
எனவே அந்த சார் யார் என கேட்டு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. யாரோ வேண்டப்பட்ட நபரை காப்பாற்றவே அமைச்சர்கள், இந்த வழக்கில் ஞானசேகரனை தவிர வேறு யாரும் இல்லை என கூறி வருகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள திரு. @mkstalin மாடல் அரசைக் கண்டித்தும், @AIADMKOfficial சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்குமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் @mkstalin மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.
அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? #யார்_அந்த_SIR ? என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications