பேட்டரியை எடுக்க வாக்கு இயந்திரங்களின் சீலை உடைத்த அதிகாரிகள்.. அரசியல் கட்சியினர் வாக்குவாதம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட காவான்தண்டலம் மற்றும் வயலூர் ஆகிய ஊராட்சிகளில் நேற்று வாக்குப்பதிவு முடிந்ததும், கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்கு இந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு மையத்தை விட்டு கட்சி முகவர்கள் வெளியேறியதும், தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரங்களில் வைக்கப்பட்ட சீலை அகற்றியுள்ளனர். இத்தகவலை அறிந்த கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு தேர்தல் அலுலவர்களுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்,
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பேட்டரியை எடுக்காமல் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பேட்டரியை எடுக்க முயற்சித்து வேகமாக இழுத்த போது, ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சீல் சிறிது அகன்று விட்டது என்றார்.
பேட்டரியை எடுத்த பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் கூறினார். ஆட்சியரின் விளக்கத்தை அடுத்து அப்பகுதியில் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications