உங்க எல்லோருக்கும் நன்றி! ‘மீண்டு’ம் வந்த டான்யா! அந்த சிரிப்பு இருக்கே.. கண்கலங்கும் பெற்றோர்!
காஞ்சிபுரம் : அரிய வகை முக தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் சிறுமி டான்யா தற்போது பூரண நலம் பெற்று விட்டார் எனவும், இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் முகத்தில் ஏற்பட்ட வீக்கம் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினரின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரியவகை முகச் சிதைவு நோயால் பாதிக்கபட்டிருந்தார்.
முக அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் உதவி செய்யவேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்களில், சமூக வலைதளங்களில் டான்யாவுக்கு உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

முதல்வர் உத்தரவு
எனக்கு விளையாட ஆசையாக உள்ளது. ஆனால், என் கன்னம் இப்படி இருப்பதால், மற்ற நண்பர்கள் என்னுடன் சேர்ந்து விளையாட மறுக்கிறார்கள். எனக்கு முதல்வர் ஐயா உதவவேண்டும் என்று கோரியிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி காலை 8 மணி அளவில் 10பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் அவசர சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

அறுவைச் சிகிச்சை வெற்றி
காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் சுமார் 10 மணிநேரமாக நடைபெற்று வந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து அறுவை சிகிச்சை முடிந்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்த சிறுமி டான்யாவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் நேரில் சந்தித்தார். தொடர்ந்து உடல் நலம் தேறி வரும் சிறுமி டான்யாவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

பெற்றோர் நன்றி
தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த சிறுமி டான்யா தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை மீண்டும் அமைச்சர் நாசர் சந்தித்து பேசினார். மேலும் மருத்துவர்களிடமும் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து சிறுமி டான்யாவின் பெற்றோர் தமிழக அரசுக்கும், மாணவியின் நிலை குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

விரைவில் குணமாவார்
இந்நிலையில் சிறுமி டான்யாவின் முகத்தில் தற்போது வீக்கம் சற்று குறைந்துள்ளது என கூறும் மருத்துவர்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் முற்றிலுமாக வீக்கம் குறைந்து விடும் என தெரிவித்தனர். மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தொடை பகுதியில் இருந்து சதை எடுக்கப்பட்ட இடம் குணமடைந்து வருவதாகவும், பொருத்தப்பட்டுள்ள சதையானது இயல்பாக மாற்றம் பெற குறைந்தது 4 முதல் 5 மாதங்கள் வரை ஆகும் என விளக்கமளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications