கொரோனா- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை- சுகாதார துறை செயலாளர்
காஞ்சிபுரம்: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை பாயும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிகம் உள்ள காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் உள்ள பிள்ளையார் பாளையத்தில் நோய்த் தடுப்புப் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொரோனாவை தடுப்பது குறித்து விளக்கி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கொரோனா சிகிச்சை தொடர்பாக அரசு ஆணையை பின்பற்றி பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். கொரோனவைரஸ் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 5,67,205- 4-வது இடத்தில் தமிழகம்
அத்தகைய மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், நோயாளிகளிடம் அதிகமாக வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு மருத்துவமனைகளப் பொறுத்தவரை அனைத்து உயர்தர மருந்துகள் தற்போது கையிருப்பு உள்ளன.
தனியார் மருத்துவமனையில் உயிர் காக்கும் உயர் தர மருந்துகள் ஏஜெண்டுகள் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிந்தால் கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும் பல இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கள்ளத்தனமாக மருந்து கொண்டுவந்து விற்பது குறித்து அறிந்து பிரத்யேகமாக 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் மூலம் ஈரோடு, மதுரை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக மருந்து விற்பனை செய்த ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு உயர் தர மருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் அரசு மூலமாக அவர்களுக்கு வழங்குவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Recommended Video
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.