காலை மிதித்தது குற்றமா.. தேசிய செஸ் சாம்பியனை வெட்டிய மர்ம கும்பல்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம்: தேசிய செஸ் சாம்பியன் மற்றும் பள்ளி மாணவன் உட்பட 3 பேரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கவியரசு (23). சதுரங்க வீரரான இவர் கோவாவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறை காரணமாக அவர் சொந்த ஊர் திரும்பியுள்ளார். நேற்று நள்ளிரவு தனது நண்பர் நரேஷ் (22) மற்றும் 16 வயது பள்ளி மாணவர் ராகுலுடன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக பேசிக்கொண்டே நடந்து சென்று இருக்கிறார்.
அப்போது சாலையோரம் படுத்துக்கிடந்த ஒருவரது காலை மிதித்துவிட்டு மூவரும் வருத்தம் தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே அவர்கள் நரசிங்கராயர் தெரு வழியாக சென்றுகொண்டு இருந்தபோது 15 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து இருக்கிறது. இவ்வழியாக செல்வதற்கு ரூ.2,000 கொடுக்க வேண்டும் என அந்த கும்பல் மூவரையும் மிரட்டியுள்ளது.

அந்த கும்பலிடம் கவியரசும் அவரது நண்பரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்களை வழிமறித்த கும்பல் மூவரையும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த 3 பேரும் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.
இதில் படுகாயமடைந்த சதுரங்க வீரர் கவியரசுவும் அவரது நண்பர் நரேஷும் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி மாணவர் ராகுல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சிபுரம் சிவாகாஞ்சி காவல்துறையினர் மூவரையும் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற 15 பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சாலையோரம் படுத்துக் கிடந்தவரின் காலை தவறுதலாக மிதித்ததற்காக மூவரும் வெட்டப்பட்டார்களா? அல்லது அவர்களை வெட்டியது வழிப்பறி கும்பலா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications