வடகலை - தென்கலை பஞ்சாயத்து! ஆளை விடுங்க என சாமியை வீதி உலா அழைத்து சென்ற மக்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாமியை வீதி உலா அழைத்துச் செல்லும்போது, வடகலை-தென்கலை பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து சாமியை பொதுமக்களே வீதி உலா அழைத்து சென்றுள்ளனர்.
சண்டை, வன்முறை கூடாது என போதிக்க வேண்டிய அர்ச்சகர்களே, இப்படி சண்டைபோட்டுக்கொள்ளலாமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வடகலை-தென்கலை என்றால் என்ன?:
எல்லா வைணவ கோயில்களிலும் காலையிலும், மாலையிலும் பிரபந்த சேவை நடைபெறும். அதாவது நாலாயிர திவ்ய பிரபந்தம் இறைவனுக்கு முன்பாக பாடப்படும். இதனை வடகலை ஐயங்கார் மற்றும் தென்கலை ஐயங்கார் பாடுகின்றனர். வடகலை தரப்பினர் 'ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரம்' எனும் மந்திரத்தை ஓதிவிட்டு பிரபந்தம் பாட தொடங்குவர். தென்கலையை பொறுத்தவரை 'ஸ்ரீ சைலேஷ தயாபாத்திரம்' மந்திரத்தை சொல்லிவிட்டு தொடங்குவார்கள். இதுதான் வடகலைக்கும் தென்கலை பிரிவினருக்கும் உள்ள வேறுபாடு.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலை பொறுத்தவரை, இவர்கள் இரண்டு தரப்பில் யார் பிரபந்தம் பாடுவது என்பதுதான் சண்டை.
காஞ்சிபுரம் கோயில் சண்டை:
இந்த சண்டை கடந்த 2018ம் ஆண்டு உச்சம் பெற்றது. விஷயமறிந்தவர்கள், ஏறத்தாழ நூற்றாண்டு காலமாக இரண்டு பிரிவினரும் இது தொடர்பாக பஞ்சாயத்து செய்து வருகின்றனர் என்று கூறுகின்றனர். சமீப காலமாக இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டும், தாக்கிக்கொண்டும் இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், சண்டை பொதுமக்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த பிரச்சனையை நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளலாம் என்று இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடியது. தொடக்கத்தில் வடகலைக்கு ஆதரவாகவும், மேல் முறையீடு செய்தபோது தென்கலைக்கு ஆதரவாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது தொடர்பான மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இருந்தாலும் இரண்டு பிரிவில் யாரும் தங்களை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
நேற்று நடந்த பஞ்சாயத்து:
பொங்கல் பண்டிகையை அடுத்து வரதராஜ பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்சவம் தொடங்கியது. பார்வேட்டை உற்சவத்துக்கு வந்த வரதராஜ பெருமாளுக்கு மண்டகப்படி நடக்கும்போது, பெருமாள் முன்பு யார் பிரபந்தம் பாடுவது என்கிற பஞ்சாயத்து எழுந்தது. உடனடியாக இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாற இருந்த நிலையில், போலீசாரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
ஆனால் சமாதானத்திற்கு இரு தரப்பினரும் ஒத்துழைக்கவில்லை. இதை எல்லாவற்றையும் கவனித்த ஊர் மக்கள், "இதுபோல பிரச்சனை செய்யாதீங்க" என்று கூறி சாமி அவர்களே ஊர்வலமாக அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications