Vijay Visit Parandur: சென்னை நீலாங்கரையிலிருந்து பரந்தூர் புறப்பட்டார் விஜய்! யாருக்கெல்லாம் அனுமதி தெரியுமா?
காஞ்சிபுரம்: பரந்தூரில் அமையவுள்ள 2வது விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை சந்திக்க நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள யார் யாருக்கு அனுமதி தெரியுமா?
சென்னையில் விமான நிலையம் இருக்கும் போது அங்கு மக்கள் நெரிசல் ஏற்படுவதால் சென்னைக்கு அருகே 2 ஆவது விமான நிலையம் அமைக்க பல்வேறு ஊர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் கடைசியில் டிக்கானது பரந்தூர்.

இங்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களை கடந்து போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. அவருக்கு 4 நிபந்தனைகளுடன் அனுமதியானது வழங்கப்பட்டது. முதலில் பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் சந்திக்க தவெக சார்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில் அது திறந்தவெளி மைதானம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் பரந்தூரில் மக்களை வீனஸ் திருமண மண்டபத்தில் சந்திக்க விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விஜய்யும் எங்கு சந்தித்தால் என்ன மக்களை சந்திக்கத்தானே என கூறி தனியார் மண்டபத்தில் சந்திக்க ஒப்புக் கொண்டார். இந்த மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. அது போல் விஜய்யுடன் குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த தவெக தொண்டர்களுக்கு விஜய் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி தனது வருகையை அறிந்து பரந்தூர் பகுதிக்கு கட்டுப்பாடுகளை மீறி தொண்டர்கள் யாரும் வர வேண்டாம். பொதுமக்களுக்கு இன்னல்களை தர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். பரந்தூரில் உள்ள வீனஸ் மண்டபத்தில் காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை மக்களை சந்திக்கிறார். ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி விஜயை திருமண மண்டபத்தில் சந்திக்க 13 கிராம மக்கள் 17 வேன்களில் அழைத்து வரப்படுகிறார்கள். அது போல் விஜய்யும் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பரந்தூருக்கு காலை 8 மணிக்கு காரில் புறப்பட்டார். விஜய் சந்திப்பு நிகழ்வையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications