அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா; திமுகவுடன் கரம் கோர்த்த அதிமுக எம்.எல்.ஏ.! கன்னியாகுமரி சுவாரஸ்யம்!
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைவெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள திமுக அமைச்சர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கரம் கோர்த்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தொகுதிப்பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக அரசியல் ஆருடங்கள் கூறப்பட்டு வரும் வேளையில் குமரியில் நடந்துள்ள இந்த நிகழ்வை சற்று சீரியஸாகவே பார்க்கிறது அதிமுக தலைமை.
திமுக அமைச்சர்களுடன் கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் நட்பு பாராட்டியதுடன் மழைவெள்ள ஆய்வின் போது அவர்களுடன் ஒன்றாகவே பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கடந்த வாரம் அமைச்சர்கள் குழு ஒன்றை அங்கு அனுப்பி வைத்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்தக் குழுவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், கே.ஆர்.பெரியகருப்பன், உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி பகுதியில் ஆய்வுக்காக சென்றிருக்கின்றனர்.

தளவாய் வரவேற்பு
அவர்களை வாஞ்சையுடன் வரவேற்ற முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் நாள் முழுவதும் ஒன்றாக பயணித்து தனது தொகுதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை விவரித்திருக்கிறார். மேலும், ஒரு காலத்தில் அதிமுகவின் முக்கியப் பிரமுகராக இருந்து இப்போது திமுகவில் அமைச்சராக இருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆருடன், அரசியலில் குரு சிஷ்யன் என்ற முறையில் தனது பழைய நினைவலைகள் சிலவற்றை தளவாய் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் வியப்பு
மிகவும் கேசுவலாக சொந்தக்கட்சியை சேர்ந்த அமைச்சர்களிடம் பேசுவது போல் உரிமையாக தளவாய்சுந்தரம் திமுக அமைச்சர்களுடன் உரையாடியது அங்கிருந்த அதிகாரிகளுக்கே வியப்பை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் திமுகவுக்கு தாவ தயாராக இருப்பதாக யூகங்கள் உலா வந்துகொண்டிருக்கும் சூழலில் தளவாயின் மூவ்மெண்டை மிக கவனமுடன் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது இ.பி.எஸ்.தரப்பு.

ஜெயலலிதா காலம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனின் ஆதரவாளராக வலம் வந்த தளவாய்சுந்தரம், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா இருந்தவரை திமுகவினரை கண்டாலே முகத்தை திருப்பிக்கொண்டு செல்வதும், ஓடி ஒளிவதுமாக இருந்த அதிமுக பிரமுகர்கள் இப்போது ஒருவருக்கொருவர் ஹாய் சொல்லி பேசிக்கொள்ளும் அளவுக்கு அரசியல் பரிணாமம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications