சாதி படம் வருது.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டுறாரு! ‘நாங்குநேரி’ கொடூரத்துக்கு காரணம்: அண்ணாமலை தாக்கு
கன்னியாகுமரி: சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் படம் எடுக்கப்படுவதாகவும், அதனை முதல்வர் ஸ்டாலின் பாராட்டுவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'மாமன்னன்' திரைப்படத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னதுரை வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் படிக்கும் சக மாணவர்கள், சாதி வெறியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவனின் வீடு புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது சகோதரியையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல அரசியல் மற்றும் திரைப்பட பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆதரவாளர்கள் பலர், அண்மையில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் இந்த சாதிய மோதலுக்கு வித்திட்டது என விமர்சித்தனர். மாமன்னன் படத்தை எடுத்து, தயாரித்த உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், 'மாமன்னன்' திரைப்படத்தை மறைமுகமாகச் சாடியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "பல்வேறு இடங்களில் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் பல படங்கள் எடுக்கப்படுகின்றன. ரெட் ஜெயன்ட் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடர்ச்சியாக சாதிய படம் எடுக்கிறார்கள். வன்முறையை தூண்டும்படி எடுக்கும் சாதிய படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகிறார்.
இதை பிஞ்சு நெஞ்சங்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? படம் சமூக அக்கறையில் எடுப்பது வேறு, சமூக தாக்கத்தை படம் எடுப்பது என்பது வேறு. வன்முறையை தூண்டுவது போல் எடுப்பது வேறு. வன்முறையை தூண்டுவதை தடுக்க வேண்டும். சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். சட்டம் மட்டும் போதாது, சினிமாவும் வன்முறையை குறைக்க பயன்பட வேண்டும்.
நாங்குநேரியில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் முதலமைச்சர் வீட்டில் இருந்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். திமுக அமைச்சர்களே பல இடங்களில் தொடர்ச்சியாக சாதி வன்மத்தை கடைப்பிடிக்கிறார்கள்." என விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சமூக இழிவை தோலுரித்துக் காட்டும் திரைப்படங்கள் எடுத்து வரும் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகிய இயக்குநர்களின் படங்கள் வன்முறையைத் தூண்டுவதாகவும், சாதிய மோதல்களை ஏற்படுத்துவதாகவும், பாஜக தலைவர்கள், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றோர் கூறி வருகின்றனர்.
குறிப்பாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழலில், அண்ணாமலையும் 'மாமன்னன்'திரைப்படத்தை மறைமுகமாக குற்றம்சாட்டும் வகையில் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications