தோள் சீலை போராட்டம் 200வது ஆண்டு விழா மாநாடு! மார்ச் 6ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரி பயணம்!
மார்ச் 6ஆம் தேதி நாகர்கோவில் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வரும் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் தோள் சீலை போராட்டம் 200வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இதையொட்டி குமரி மாவட்டத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்பாடு செய்து வருகிறார்.
இதேபோல் மார்ச் 7ஆம் தேதி நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்தையும், கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தோள் சீலை போராட்டம்
தோள் சீலை போராட்டம் நடைபெற்றதன் 200வது ஆண்டு விழா வரும் மார்ச் 6ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளோட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகள் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்று வருகிறது.

பெரியளவில் வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகப் பெரிய அளவில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ள அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் நாகர்கோவில் மேயர் மகேஷ் ஆகியோர் அது தொடர்பான முன்னேற்பாடுகளை முழு வீச்சில் கவனித்து வருகின்றனர். 6ஆம் தேதி இரவு நாகர்கோவிலில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் 7ஆம் தேதி நாகர்கோவில் மாநகராட்சி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

ஆயிரக்கணக்கான நிர்வாகிகள்
ஸ்டாலினை குமரி மாவட்டத்திற்கு வரவேற்பது முதல் அங்கிருந்து வழியனுப்புவது வரை பார்த்து பார்த்து ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். ஈரோட்டில் இருந்து ஊருக்கு வந்ததும் வராததுமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து முதல்வர் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் விழா நடைபெறும் திடலையும் நேரில் பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

சுரேஷ்ராஜன்
முதல்வரின் நாகர்கோவில் விசிட்டின் போது முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் முதல்வர் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சுரேஷ்ராஜன் ஒரு காலத்தில் ஸ்டாலினுக்கு மிகவுன் நெருங்கிய வட்டத்தில் இருந்து கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது எழுந்த புகார்களை தொடர்ந்து முதல்வரால் தனது நெருங்கிய வட்டத்திலிருந்து தூக்கி வீசப்பட்டவர் சுரேஷ் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications