நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் மோதல்.. கன்னியாகுமரி பள்ளிவாசலில் அடிதடி.. பதற்றம் - போலீஸ் குவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நோன்பு கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பயங்கரமாக மோதல் நடந்தது. இதில் ஆண்களும், பெண்களும் போலீசார் முன்பே ஒருவரையொருவரம் கடுமையாக தாக்கி கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. தற்போது பெரும் பதற்றம் நிலவும் நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளி வாசலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையே தான் கடந்த 4 ஆண்டுகளாக ரமலான் நோன்பு காலத்தில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

நோன்பு கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பள்ளி வாசலின் 2 தரப்பினர் இடையே மோதல் என்பது ஏற்பட்டு வந்தது. தற்போதும் ரமலான் நோன்பு காலம் என்பதால் பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான குழுவினர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பிரச்சனை செய்யக்கூடாது என வலியுறுத்தினர். மேலும் பள்ளிவாசல் பகுதியில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் இன்று காலையில் நோன்பு கஞ்சி காய்ச்சுவது மற்றும் தொழுகை நடத்தும் விவகாரத்தில் இருதரப்பினர் இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்பினர் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியது. ஆண்கள் ஒருவரையொருவர் கையாலும், கல்லாலும் தாக்கி கொண்டனர். அதேபோல் பெண்களும் ஒருவையொருவர் தாக்கி கொண்டனர்.
இதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக மோதலை தடுக்க முயன்றனர். ஆனால் குறைந்த அளவில் மட்டுமே போலீசார் இருந்ததால் மோதலை உடனடியாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர். சாலையில் விரட்டி விரட்டி தாக்கி கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் மாறி பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கூடுதல் போலீசார் வந்த நிலையில் மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் 5 பெண்கள், 5 ஆண்கள் என 10 பேர் ரத்தகாயமடைந்தனர். இவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஒரு தரப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தை நடத்த முயன்றனர். இதனால் மேலும் பதற்றம் அதிகரித்தது. தற்போது பள்ளிவாசல் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications