கன்னியாகுமரி அருகே மார்த்தாண்டத்தில் மருமகளிடம் அத்துமீற முயன்ற மாமனார்.. வசமாக சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடைய காண்டிராக்டர், கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவிக்கு 31 வயது ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று காண்டிராக்டரின் மனைவி வீட்டில் தனியாக இருந்த போது அவரது சித்தப்பா செய்த காரியம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கேரளாவை ஒட்டியுள்ள பகுதியாகும். திருவனந்தபுரத்திற்கும், கன்னியாகுமரிக்கும் கிட்டத்தட்ட நடுவில் உள்ள பகுதியாகும். மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்த காண்டிராக்டருக்கு 36 வயது ஆகிறது.இவர் கேரளாவில் வேலைகளை எடுத்து செய்துவருகிறார். இவருக்கு 31 வயதுடைய மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

காண்டிராக்டர் சிறுவயது இருக்கும் போது, அவரது தந்தை காலமாகிவிட்டார். இதனால் அவரை சிறுவயதில் இருந்தே தனது சித்தப்பா தான் தன் பொறுப்பில் வைத்து வளர்த்து வந்துள்ளார். அந்த சித்தப்பாவுக்கு தற்போது 57 வயது ஆகிறது. அவர் மார்த்தாண்டம் பகுதியில் சவுண்ட் சர்வீஸ் தொழில் நடத்தி வருகிறார். காண்டிராக்டரின் வீடும், அவரது சித்தப்பா வீடும் அருகருகே தான் இருக்கிறது.
இந்தநிலையில் சம்பவம் நடந்த அன்று கேரளாவிற்கு காண்டிராக்டர் பணிக்கு போய்விட்டதாக கூறப்படுகிறது.அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் கணவரின் சித்தப்பா வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியிடம் நைசாக வந்து அத்துமீற முயன்றாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த காண்டிராக்டரின் மனைவி அவரது பிடியில் இருந்து தப்பிக்க வேண்டி கதறி கூச்சலிட்டாராம். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
உடனே காண்ட்ராக்டரின் சித்தப்பா அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மாமனார் அத்துமீற முயன்றதை தடுத்த முயற்சியில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவரை பொதுமக்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காண்டிராக்டர் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தனது சித்தப்பாவிடம் தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காண்டிராக்டர், தனது சித்தப்பாவின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதற்கிடையே காண்டிராக்டரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவரின் சித்தப்பா மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காண்டிராக்டர், தனது வீட்டு ஜன்னலை உடைத்ததாக அவரது சித்தப்பா கொடுத்த புகாரின் பேரில் காண்டிராக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். மருமகளிடம் அத்துமீறியதாக மாமனார் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications