காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சு?
கன்னியாகுமரி: தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா ஆளுநரின் தந்தையுமான குமரி ஆனந்தன் திடீரென்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குமரி அனந்தன். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இவரது மகள் தான் தமிழிசை சவுந்தரராஜன். பாஜக மாநில தலைவராக இருந்த இவர் தற்போது தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார்.

தவறி விழுந்த குமரி அனந்தன்
இந்நிலையில் குமரி அனந்தன் மகள் தமிழிசை சவுந்தரராஜனுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு குமரி அனந்தன் சொந்த மாவட்டமான கன்னியாகுமரி திரும்பினார். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அவர் நிர்வகிக்கும் வரலாற்று கூடத்தில் தங்கியிருந்தார். இந்த வேளையில் அவர் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக கால்தவறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை
உடனடியாக அவர் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் ஏற்பட்ட இடத்தில் மூன்று தையல் போடப்பட்டுள்ளது. தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். நேற்று காலை வரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குமரி அனந்தன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

கட்சியினர் சந்திப்பு
இந்நிலையில் குமரி அனந்தனை காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர். மேலும் காயம் சரியாவதை பொறுத்து இன்னும் சில நாட்களில் குமரி அனந்தன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

யார் இந்த குமரி அனந்தன்
குமரி அனந்தன் பன்முக திறன் கொண்டவர்.தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்ற குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவர் எம்பியாகவும், எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். மேலும் மதுவிலக்கு, பனை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தினார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் சொந்த அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications