கன்னியாகுமரி நகை பட்டறை உரிமையாளரை விடிய விடிய தேடிய மனைவி.. கடையின் ஷட்டரை உடைத்தால் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி குழித்துறை பகுதியை சேர்ந்த ஒருவர் மார்த்தாண்டம் காந்தி மைதான பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இப்படி ஏற்பட்ட குடும்ப தகராறில் நகை பட்டறையை பூட்டிக் கொண்டு உரிமையாளர் உறங்கி உள்ளார். போனையும் எடுக்கவில்லை.. அவரை ஷட்டரை உடைத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனால் அவரது மனைவி நிம்மதி அடைந்தார்.
கணவன் மனைவி இடையே சண்டைகள் அடிக்கடி வருவது வழக்கம். அப்படி வரும் போது, சில நேரம், கணவன் அல்லது மனைவி கோபித்துக் கொண்டு செல்வது வழக்கம். அப்படிகோபித்துக் கொண்டு செல்பவர்கள் பெரும்பாலும் அம்மா வீட்டிற்கோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ செல்வார்கள். பின்னர் கோபம் தீர்ந்த உடன் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.

அதேநேரம் சிலர் கோபித்துக் கொண்டு வேலை செய்யும் இடத்திலேயே உறங்குவதும் உண்டு. கடை வைத்திருப்போர், அலுவலகத்தில் வேலை செய்வோர், வீட்டிற்கு செல்லாமல் கடையிலோ அல்லது அலுவலகத்திலோ தங்கிவிடுவது வழக்கம். அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நகைப்பட்டறை வைத்துள்ளவர் செய்துள்ளார். அதனால் என்ன ஆனது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர், மார்த்தாண்டம் காந்தி மைதான பகுதியில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பொதுவாக வேலை அதிகமாக இருக்கும் நாட்களில், இரவு பட்டறையிலேயே படுத்து தூங்குவது வழக்கம். அப்போது மனைவிக்கு தகவலை போன் மூலம் தெரிவித்துவிடுவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் நகைப்பட்டறை உரிமையாளர் மனைவியிடம் கோபித்துக் கொண்டு வந்ததுடன், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள தனது நகை பட்டறையில் ஷட்டரை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு படுத்து தூங்கி விட்டார். இரவில் மனைவி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் போன் செய்தபோதும் அவர் யாரிடமும் பேசவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்கள். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை.
நகைப்பட்டறை உள்பக்கமாக பூட்டிக்கிடந்ததால் மனைவி, உறவினர்கள் இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர் . உடனே குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையிலான வீரர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள அவரது நகை பட்டறைக்கு சென்றனர். அங்கு போலீசாரும் வந்தனர். அங்கு போலீசார் சுமார் ½ மணிநேரம் அழைத்தும் உள்ளே இருந்து பதில் எதுவும் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது,.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பட்டறையின் ஷட்டரை உடைத்து சிறிது மேலே தூக்கினர். அப்போது சத்தம் கேட்டு உள்ளேயிருந்த உரிமையாளரும் ஷட்டர் உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து மேலே தூக்கினார். அவரை கண்டதும் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். போலீசார் விசாரித்தபோது, பட்டறை உரிமையாளர் அயர்ந்து தூங்கியதால் போன் அழைப்பும், போலீசாரின் சத்தமும் கேட்கவில்லை என கூறியிருக்கிறார். எனினும் அவரது செயலை பார்த்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பட்டறை உரிமையாளருக்கு அறிவுரை கூறியதோடு குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications