ஏக்கருக்கு ரூ.56,000 தரும் தமிழக அரசு.. விவசாயிகள் எப்படி பெறலாம்.. கன்னியாகுமரி கலெக்டர் அறிவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26 ஆண்டில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டில் பொது பிரிவினருக்கு ரூ.26.86 லட்சமும், ஆதிதிராவிட இனத்தவருக்கு ரூ.6.80 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
சொட்டுநீர்ப் பாசன மானிய திட்டத்தில், விவசாயிகளுக்கு ஏற்படும் செலவைக் குறைக்கும் வகையில் அரசு மானியம் வழங்கி வருகிறது. நீர்ப்பாசன வசதியற்ற விவசாய நிலத்தில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்கத் தேவையான நீர் ஆதாரத்தை உருவாக்குவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், மின் மோட்டார் பம்ப் அல்லது டீசல் இன்ஜின் வாங்குவதற்கும், கிணற்றிலிருந்து நீரை நுண்ணீர்ப்பாசனம் மூலம் வயலுக்கு எடுத்துச் செல்ல தேவையான பி.வி.சி நீர் கடத்துக் குழாய்கள் வாங்குவதற்கும் அரசு கணிசமாக மானியம் வழங்கி வருகிறது.

தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட பழமரப்பயிர்களுக்கும், தேக்கு, மகோகனி, மலைவேம் கத்திரிக்காய், தக்காளி, மிளகாய் என காய்கறிப் பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் மிக இன்றியமையாததாக உள்ளது.இந்நிலையில் சொட்டு நீர் பாசனத்திட்டத்தில் மானியம் எப்படி தரப்படுகிறது என்றால், 4 அடி இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கும் சொட்டுநீர் பாசன அமைப்புக்கு, பெரிய விவசாயி எனில் ஒரு ஹெக்டேருக்கு, ரூ. 1,05,530/- (ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய்); சிறு, குறு விவசாயி எனில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,35,855/- (ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 855 ரூபாய்) மானியம் வழங்கப்படுகிறது.
சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 56,600 ரூபாயும், பெரிய விவசாயிக்கு ஏக்கருக்கு 43,900 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனத்தையும் விவசாயிகளே தேர்வு செய்து கொள்ள முடியும். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26 ஆண்டில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டில் பொது பிரிவினருக்கு ரூ.26.86 லட்சமும், ஆதிதிராவிட இனத்தவருக்கு ரூ.6.80 லட்சமும், பழங்குடியினருக்கு ரூ.0.34 லட்சமும் நிதி பெறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம். இதில் விவசாயிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், அடங்கல், சிறு குறு விவசாயியாக இருப்பின் தாசில்தாரரிடமிருந்து பெறப்பட்ட சான்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் சான்று போன்ற ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications