கன்னியாகுமரியில் நீடிக்கும் கனமழையால் வெள்ளம் - ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் மூழ்கின
கன்னியாகுமரியில் 3வது நாளாக நீடிக்கும் கனமழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி: மூன்றாவது நாளாக நீடிக்கும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வழிகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கோதையாற்றில் பாயும் வெள்ளம், திற்பரப்பு அருவியை முற்றிலும் மூழ்கடித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள திக்குறிச்சி, குழித்துறை, மங்காடு, பரக்காணி, முஞ்சிறை, பார்திவபுரம், வைக்கலூர் போன்ற தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளதால், விடிய விடிய மின்சாரம் இல்லாமல் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
வெப்பச்சலனம் காரணமாக குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மழை நீடித்து வந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி காலையில் இருந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. பலத்த சூறை காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழையாக பெய்தது. நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, அருமனை, திங்கள்சந்தை, குளச்சல் உள்பட மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. விடிய விடிய பெய்த மழை நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் வரை எதிரொலிக்கும் யாஸ் புயல் தாக்கம்.. பெரும் காற்று, கன மழை! மரங்கள் சாய்ந்தன
ஊருக்குள் தண்ணீர்
48 மணி நேரத்தை கடந்தும் மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆங்காங்கே குளங்கள் நிரம்பி, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் வள்ளியாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டது. பழையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
மரங்கள் விழுந்தன
குலசேகரம், திற்பரப்பு, திருவரம்பு, திருவட்டார், சுசீந்திரம், தேரூர், கற்காடு, புதுக்கிராமம் பகுதிகளில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கின. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தது. சுசீந்திரம் அடுத்த ஆஸ்ரமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கும் கனமழை
நாகர்கோவில் நேற்று அதிகாலை வரை விடிய விடிய சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டே இருந்ததால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. குளங்கள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டதால் ஊட்டுவாழ்டம், இறச்சக்குளம், தாழக்குடி, வீரநாராயணமங்கலம், அருமநல்லூர், காட்டுப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியுள்ளன. நாகர்கோவில்மெயின் ரோட்டில் பெரிய மரம் முறிந்து விழுந்தது. மீனாட்சிபுரத்தில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்தது.
அணைகள் நிரம்பின
குமரியில் தொடர் மழையால் 48 அடி கொள்ளளவு கொண்ட மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணை நேற்று காலை 8 மணி நிலவரப்படி 44.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடியை தாண்டி தண்ணீர் திறந்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் நேற்று காலை 70.50 அடியாக இருந்தது. மாம்பழத்துறையாறு அணை நேற்று காலை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டியது. அணைக்கு வரும் 149 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. வறண்டுகிடந்த முக்கடல் அணை 23 அடியை எட்டி உள்ளது.
விளைநிலங்கள் மூழ்கின
கரையோரங்களில் இருந்த குடியிருப்புகள் மூழ்கியுள்ளன. கன்னிப்பூ சாகுபடிக்காக நெல் சாகுபடி விதைப்பு நடைபெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் மூழ்கியுள்ளன, ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் கோவில்களிலும் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.