கன்னியாகுமரி: மோடி வருகையால் இடம் மாறிய பகவதி அம்மன் கோவில் 17 உண்டியல்கள்!
கன்னியாகுமரி: பிரதமர் மோடி வருகையால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டன.
லோக்சபா தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொகுதிகளில நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று கன்னியாகுமரி வருகை தந்தார். கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு விவேகானந்தர் பாறைக்கு தனிப் படகில் சென்றார். விவேகானந்தர் பாறையில் நேற்று முதல் தொடர்ச்சியாக 45 மணி நேரம் தியானம் இருக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் வருகையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் 3 நாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் மோடி தியானம் மேற்கொள்ளும் தியான மண்டபம் தவிர இதா பகுதிகளுக்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தியானத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக கன்னியாகுமரியின் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் ஆலயத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு கோவிலின் வடக்கு வாசலில் பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற பிரதமர் மோடி முதலில் காலபைரவரை வழிபட்டார். இதனையடுத்து கொடி மரத்தை தரிசனம் செய்துவிட்டு மூலஸ்தான கருவறையில் உள்ளபகவதி அம்மனை தரிசித்தார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னதாக கை, கால்களை கழுவ குழாய் மூலம் தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது. அத்துடன் சட்டையை கழற்றிவிட்டு கோவிலுக்கு செல்ல தனி கொட்டகை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த தடுப்புகள் அனைத்தும் பிரதமர் மோடிக்காக அகற்றப்பட்டன. அத்துடன் கோவிலில் எப்போதும் நிரந்தரமாக 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்டியல்களும் கூட கோவிலின் வெளிப் பிரகாரத்துக்கு நேற்று இடம் மாற்றப்பட்டிருந்தன. பகவதி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் நேற்று துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications