கன்னியாகுமரி மீனவர்களுக்கு குட்நியூஸ்.. எரிபொருள் செலவு 50 சதவீதம் குறையும்.. கலெக்டர் விளக்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுமை கடல்வளம் திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று கலெக்டர் அழகுமீனா கூறினார். மண்ணெண்ணெய் இயந்திரங்களுக்குப் பதில் எல்.பி.ஜி கிட் பொருத்தும் இந்த திட்டத்திற்கு ₹1.90 கோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மீனவர்களுக்கு 50% வரை எரிபொருள் செலவு குறையும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய மீன்பிடி நாட்டுப்படகுகள் பெரும்பாலும் மண்ணெண்ணெய்யில் இயங்கும் வெளிப்புற மோட்டார் எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன. தற்போது 4,404 மண்ணெண்ணெய் எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு மாதம் ஒன்றிற்கு 13 லட்சத்து 77 ஆயிரத்து 185 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் குறைந்தபட்சமாக 1 கோடியே 62 லட்சத்து 94 ஆயிரத்து 800 லிட்டர் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. படகு ஒன்றிற்கு ஒரு ஆண்டுக்கு 3,700 லிட்டர் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றிற்கு 25 ரூபாய் எனும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனால் செலவுகள் அதிகமாவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் மற்றும் கடல் மாசுபாட்டையும் அதிகரிக்கிறது.
எனவே மீன்பிடித்தலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுத்தமான எரிபொருளாக திரவ எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப்படகுகளில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் எந்திரங்களை எல்.பி.ஜி. எரிபொருள் மாற்று உபகரணம் (கிட்) பொருத்தப்பட்ட எந்திரங்களாக அல்லது புதிய எல்.பி.ஜி. எந்திரங்களாக மாற்றுவதற்கான முன்னோடி திட்டமான பசுமை கடல்வளம் திட்டத்தினை ரூ.1.90 கோடியில் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பசுமை கடல்வளம் திட்டத்தின் மூலம் மீன்பிடி எரிபொருளாக திரவ எரிவாயு பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கடலிலும், சுற்றுச்சூழலிலும் கரியமில வாயு மாசுபாடு குறைந்து மீன் வளங்கள் பாதுகாக்கப்பட்டும். மேலும் மண்ணெண்ணெய்யை ஒப்பிடுகையில் திரவ எரிவாயு குறைந்த அளவு கரியமில வாயுவினை வெளியிடுவதால் காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் உதவும். சுமார் 50 சதவீதம் வரை செலவு குறைவு ஏற்படும். இதன் மூலம் மீனவர்களின் எரிபொருள் செலவில் கணிசமான அளவில் குறைந்து சேமிப்பு அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை ஏற்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பசுமை கடல்வளம்" முன்னோடி திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மண்ணெண்ணெய்யால் இயங்கும் அனைத்து வெளிப்பொறுத்தும் எந்திரங்களையும் படிப்படியாக திரவ எரிபொருளுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு உருவாகும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications