அலேக்காக தூக்கி.. ஆண்களை கடத்தி பலாத்காரம் செய்யும் சைக்கோ மனிதன்.. கன்னியாகுமரியில் 'பகீர்'
அந்த நபர் சில ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதும், வடமாநில இளைஞர்களை கடத்திச் சென்று அவர்களை பலாத்காரம் செய்வதும் தெரியவந்தது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்யும் சைக்கோ மனிதனை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் தொடர்ந்து பல இளைஞர்கள் மாயமாவதும், பின்னர் வருவதுமாக இருந்த நிலையில், அதன் பின்னணி தற்போதுதான் தெரியவந்துள்ளது.
பல மாதங்களாக இந்த வேலையில் ஈடுபட்டு வந்த அந்த மனிதனின் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, போலீஸார் தனிப்படை அமைத்து அவனை தேடி வருகிறார்கள்.

மாயமாகும் இளைஞர்கள்
கன்னியாகுமரியில் உள்ள நான்கு வழிச் சாலை பகுதி அருகே டாஸ்மாக் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பகுதியை இரவு நேரங்களில் தனியாக கடந்து செல்லும் இளைஞர்கள் அடிக்கடி காணாமல் போயுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து அவர்கள் மீண்டும் வந்திருக்கின்றனர். குறிப்பாக, வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் இதுபோன்று மாயமாவதும், பின்னர் வருவதுமாக இருந்திருக்கிறார்கள்.

ஆறரை அடி முரட்டு மனிதன்
இதுகுறித்து உளவுத்துறை போலீஸார் மூலம் காவல்துறைக்கு இந்த விஷயங்கள் தெரியவந்திருக்கின்றன. எனினும், காணாமல் போனவர்கள் திரும்ப கிடைத்துவிடுவதாலும், கொலை - வழிப்பறி போன்ற எந்தக் குற்றங்களும் நடைபெறாததாலும் யாரும் இதுகுறித்து போலீஸாருக்கு புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் இரவு நடந்து வந்து கொண்டிருந்த வடமாநில இளைஞரை, ஆறரை அடி உயரமுள்ள ஒரு மனிதன் வழிமறித்துள்ளான்.

இளைஞரை கடத்த முயற்சி
பின்னர் அந்த இளைஞரை ஒற்றை கையால் அலேக்காக தூக்கி தனது பைக்கில் வலுகட்டாயமாக உட்கார வைக்கிறான் அந்த ஆசாமி. இவனை பார்த்து பயந்துபோன அந்த இளைஞர், "என்னை விட்டுவிடு" என இந்தியில் கத்தி கதறுகிறார். ஆனால், அவனோ விடாமல் அந்த இளைஞரை கடுமையாக தாக்கி பைக்கில் அமர வைத்து கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது அந்த இளைஞர் பயத்தில் சத்தமாக கூச்சலிடவே, அருகில் இருந்த அலுவலகத்தின் காவலாளி உள்ளிட்ட சிலர் அங்கு ஓடிவந்தனர்.

தனிப்படை அமைப்பு
மக்கள் தன்னை நோக்கி வருவதை பார்த்த அந்த ஆசாமி, அச்சத்தில் அங்கிருந்து தப்பினார். எனினும், அங்கிருந்த கார் ஓட்டுநர் இந்த சம்பவங்களை எல்லாம் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நபர் சில ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதும், வடமாநில இளைஞர்களை கடத்திச் சென்று அவர்களை பலாத்காரம் செய்வதும் தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாகியுள்ள அவனை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications