கன்னியாகுமரி அருகே மனைவியின் உடலுடன் 14 மணி நேரம் வீட்டில் இருந்தது ஏன்.. தொழிலாளி வாக்குமூலம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டார்வின் ராஜா. இவரது மனைவி பபிதா நித்ய செல்வி கடந்த 7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியுடன் வாழப்பிடிக்காமல் இவர் செய்த செயல், கன்னியாகுமரியை ஆடிப்போக வைத்துள்ளது. இவர் மனைவியின் உடலுடன் 14 மணி நேரம் வீட்டில் இருந்தது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்த 46 வயதாகும் டார்வின் ராஜா என்பவர் கூலி வேலை செய்யும் தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பபிதா நித்ய செல்விக்கு 39 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் தங்கி படிக்கிறார்.

சந்தேகம்
நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை டார்வின் ராஜாவின் வீடு பூட்டி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று வீட்டில் பார்த்தபோது, அங்கு பபிதா நித்ய செல்வி பிணமாக கிடந்தார். கணவர் டார்வினும் அங்கு டென்சனாகவே சுற்றிக் கொண்டு இருந்தார்.
இதையடுத்து சந்தேகம் அடைந்த மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து டார்வின் ராஜாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம்
விசாரணையில் டார்வின் ராஜா போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வட்டம் நொல்லியார் கோணம் என்ற ஊர் தான் என்னுடைய சொந்த ஊர். நாங்கள் குடும்பத்துடன் காட்டுவிளையில் குடியேறி வசித்து வருகிறோம். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கழுவன்திட்டை பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் தங்கி படிக்கிறார். 2-வது மகன் அருகில் உள்ள மாமியார் வீட்டில் இரவு தூங்குவார்.
தூங்கிவிட்டேன்
எனது மனைவி பபிதா நித்ய செல்வி கடந்த 7 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவருடன் வாழ பிடிக்காமல் இருந்து வந்தேன். அத்துடன் மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தேன். கடந்த 27-ந்தேதி இரவு எனது இளைய மகன் வழக்கம்போல் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு தூங்க போய்விட்டான். இதையடுத்து நான் இதுதான் சரியான நேரம் என கருதி முன்பக்க கேட்டையும், கதவையும் பூட்டினேன். வீட்டுக்குள் வந்தபோது அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் பேசிக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. அதனால் அவர்கள் தூங்கியதும் கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால், அதற்குள் நான் அயர்ந்து துங்கி விட்டேன்.
காலையில் எழுந்தேன்
மறுநாள் காலை 6.30 மணிக்கு மனைவி எழுந்து வெளியே சென்றார். நான் மனைவியை வீட்டிற்குள் அழைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. கையை பிடித்து இழுத்தும் வராததால், கழுத்தை பிடித்து இழுத்து வந்தேன். இதை பார்த்த எனது மைத்துனர் ஏன்? என்று விசாரித்தார்.
அப்போது நான் மருந்து சாப்பிட மறுத்ததால் இழுத்து செல்வதாக கூறினேன். இதையடுத்து அவர் சென்ற பிறகு மனைவியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று கதவை பூட்டினேன். அப்போது என்னிடம் அவர் தப்பிச் செல்ல முயன்றார். உடனே நான் மனைவியை படுக்கையில் தள்ளி கழுத்தை நெரித்து தீர்த்துக் கட்டினேன். பின்னர், உடலை வீட்டில் அப்படியே போட்டு விட்டு தப்பிச் செல்ல முடிவு செய்தேன். ஆனால், பகலில் சென்றால் தெரிந்துவிடும் என்பதால் இரவு ஆகட்டும் என மனைவியின் உடலின் அருகிலேயே பதுங்கி இருந்தேன்.
டார்ச் லைட் வெளிச்சம்
நான் தப்பிச் செல்ல நினைத்ததால் இரவில் வீட்டில் மின்விளக்குகளை போடவில்லை. இதை கண்ட மைத்துனரும், அவரது கார் டிரைவரும் இரவு 8.10 மணிக்கு வந்து கதவை தட்டி அழைத்தனர். நான் கதவை திறக்கவில்லை. உடனே அவர்கள் ஜன்னல் வழியாக டார்ச் லைட் அடித்து பார்த்தனர். அப்போது நான் பதுங்கி இருப்பதை கண்டார்கள். சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே வந்தனர். அப்போது படுக்கை அறையில் மனைவி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்துவிட்டனர். உடனே நான் தப்பிச் செல்ல முயன்றேன். ஆனால், அவர்கள் என்னை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்துவிட்டார்கள்" இவ்வாறு போலீசாரிடம் டார்வின் ராஜா கூறியிருக்கிறாராம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications