கன்னியாகுமரியில் கரை ஒதுங்கும் தேக்கு தடிகள்! அவசரப்படாதீங்க.. மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை
நாகர்கோவில்: கேரள கடல் பகுதியில் மே.24ம் தேதி கண்டெய்னர் சரக்கு கப்பல் ஒன்று கவிழ்ந்தது. கடலில் கவிழ்ந்த கன்டெய்னர்கள் தற்போது கரை ஒதுங்கி வருகின்றன. அதேபோல, உடைந்த கண்டெய்னரில் இருந்து வெளிவந்த பொருட்களும் கரை ஒதுங்கியுள்ளன. இந்த பொருட்களை தொட வேண்டாம் என்று மீனவளத்துறையினர் தொடர்ந்து அறிவுத்தி வருகின்றனர்.
லைபிரியா நாட்டை சேர்ந்த MSC ELSA 3 எனும் சரக்கு கப்பல் கடந்த 640 கண்டெய்னர்களுடன் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து மே.23ம் தேதி கொச்சிக்கு வந்துக்கொண்டிருந்தது. அடுத்த நாள் இந்த கப்பல் கொச்சி துறைமுகத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் கப்பல் வரவில்லை. எனவே துறைமுகத்திலிருந்து கப்பலை தொடர்பு கொண்டிருக்கின்றனர். அப்போதுதான் கப்பல் நிலை தடுமாறி கடலில் சாய்ந்திருந்தது தெரிய வந்தது.

கப்பலிலிருந்து உடனடியாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை உணர ரோந்து விமானம் முதலில் சென்றது. அது நடத்திய ஆய்வில் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உடனே மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. கப்பலில் இருந்தவர்களில் கேப்டன், துணை பொறியாளர் அவரது உதவியாளர் தவிர அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருந்து. எனவே காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீ என்கிற அளவில் இருந்திருந்தது. இதனால் இரவு நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அடுத்த நாள் காலையில் மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கப்பல் முழுமையாக மூழ்கியது. இதுவரை பிரச்சனையில்லை. ஆனால் கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் என்ன இருந்தது என்பதுதான் சிக்கல்.
மொத்தம் இருந்த 640 கண்டெய்னர்களில் 13ல் ஆபத்தான ரசாயனம் இருந்திருக்கிறது. தவிர 84 மெட்ரிக் டன் அளவுக்கு டீசலும், 361 மெட்ரிக் டன் அளவுக்கு ஃபர்னஸ் ஆயிலும் இருந்திருக்கிறது. வேறு சில கண்டெய்னர்களில் வழக்கமாக ஏற்றுமதி செய்யப்படும் தேக்கு தடிகள், முந்திரி கொட்டைகளும் இருந்திருக்கின்றன.
இப்போது இந்த கண்டெய்னர்கள் ஒவ்வொன்றாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட கடல் பகுதியில் கரை ஒதுங்கி வருகின்றன. இன்று குளச்சல் கடற்கரையில் கரை ஒதுங்கிய தேக்கு தடிகளையும், முந்திரிகளையும் மீனவர்களும், அப்பகுதி மக்களும் சேகரித்து வருகின்றனர். ஆனால் இது மிகவும் ஆபத்தான செயல் என்று மீனவளத்துறை எச்சரித்துள்ளது. கரை ஒதுங்கிய பொருட்களை கைகளால் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications