மாதம் ஒரு மாப்பிள்ளை.. 10 பேரை மணந்த கல்யாண ராணி ரேஷ்மா.. பஞ்சாயத்து உறுப்பினரால் சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் திருமணத்திற்கு ஆன்லைன் மூலம் பெண் தேடி வந்தார். அவரை எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிராமட்டம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண் திருமணம் செய்வதாக தொடர்பு கொண்டார். திருமணம் திருவனந்தபுரத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ரேஷ்மாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பஞ்சாயத்து உறுப்பினர், அவரது அறையில் சோதித்த போது தான் உண்மை தெரிந்தது. 10 பேரை திருமணம் செய்த ரேஷ்மா அதன்பின்னரே வசமாக சிக்கி கொண்டார்.
திருமணம் செய்து ஏமாற்றுவது என்பது சில ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களுமே செய்கிறார்கள். பணம், நகைக்கு ஆசைப்பட்டு ஓரிரு நாள் வாழும் சில கல்யாண ராணிகள், அப்படியே கழட்டிவிட்டு விட்டு, பணம் நகையுடன் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். வேறு ஊரில் வேறு மாப்பிள்ளை தேடிக்கொண்டு அவரிடமும் சுருட்டுகிறார்கள்.இப்படி ஏமாற்றிய பெண் தான் ரேஷ்மா. கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருமணம் செய்ய விருப்பம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் கல்யாணத்திற்கு ஆன்லைனில் பெண் தேடினார். திருமண விளம்பர குழு ஒன்றில் தனது செல்போன் எண்ணை பதிவு செய்திருந்தார். அந்த எண்ணுக்கு கடந்த மே மாதம் 29-ந் தேதி அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் தான் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிராமட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தனக்கு ரேஷ்மா (வயது 30) என்ற மகள் இருப்பதாகவும், உங்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
கோட்டயம் மாலில் சந்திப்பு
தொடர்ந்து அந்த பெண், ரேஷ்மாவின் செல்போன் எண்ணையும் பஞ்சாயத்து உறுப்பினருக்கு கொடுத்தார். அதன் மூலம் ரேஷ்மாவிடம் பஞ்சாயத்து உறுப்பினர் பேசியிருக்கிறார். பின்னர் 2 பேரும் கோட்டயத்தில் உள்ள ஒரு மாலில் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்களாம். அப்போது நேரில் ரேஷ்மாவை பார்த்ததுமே பஞ்சாயத்து உறுப்பினர் அழகில் மயங்கினாராம். அப்போது ரேஷ்மா, தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்றும், தனக்கு திருமணம் செய்து வைப்பதில் தாய்க்கு ஆர்வம் இல்லை என்றும் அவர் தன்னை துன்புறுத்துவதாகவும் கூறியிருக்கிறார். இதனை நம்பிய பஞ்சாயத்து உறுப்பினர் ரேஷ்மா திருமணம் செய்ய முடிவு செய்தார்.
திருவனந்தபுரத்தில் கல்யாணம்
அதே சமயத்தில் ரேஷ்மா, திருமண விழாவில் தனது தரப்பில் இருந்து பெரிதாக யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், வீட்டளவில் பஞ்சாயத்து உறுப்பினர் திருமண ஏற்பாடுகள் செய்தார். இவர்களின் திருமணம் திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ரேஷ்மா முதல் நாள் திருவனந்தபுரம் வேம்பாயம் பகுதிக்கு வந்திருக்கிறார்.. அங்கு அவரை தனது நண்பர் வீட்டில் பஞ்சாயத்து உறுப்பினர் தங்க வைத்துள்ளார்.
பியூட்டி பார்லரில் ரேஷ்மா
எனினும் ரேஷ்மாவின் பேச்சு, செயல்பாடுகளில் பஞ்சாயத்து உறுப்பினருக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே திருமண அலங்காரத்திற்காக ரேஷ்மா அழகு நிலையம் சென்றிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது உடைமைகளை பஞ்சாயத்து உறுப்பினர் தனது நண்பருடன் சேர்ந்து சோதனை செய்துள்ளார். அதில் ரேஷ்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆரியநாடு போலீசில் புகார் அளித்தார்.
45 நாட்களுக்கு ஒரு கல்யாணம்
இதனிடையே ரேஷ்மா பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்து முடித்து திரும்பிய போது போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு ரேஷ்மாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில். பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி பலரை திருமண செய்து பணம், நகை பறித்தது தெரியவந்தது. இறுதியாக 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா அவரிடம் எஸ்கேப் ஆகி வந்துள்ளார்.
ஒரே ஆண்டில் ஆறு கல்யாணம்
அடுத்தாக பஞ்சாயத்து உறுப்பினரை திருமணம் செய்ய ரெடியானதும், அப்படியே அடுத்த மாதம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தனது 19-வது வயதில் முதல் திருணம் செய்த ரேஷ்மா, முதல் கணவரை பிரிந்த அவர் தொடர்ந்து பலரை திருமணம் செய்து ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 6 பேரை ஏமாற்றி பணம் பறித்துள்ளாராம். இவருக்கு தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு. அந்த குழந்தையை உறவினர்கள் பராமரிப்பில் விட்டு திருமண மோசடியில் இறங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் திகைப்பு
ஒரு பெண் இத்தனை பேரை எப்படி ஏமாற்ற முடியும் என்று போலீசாரே வாயடைத்து போனார்கள். கல்யாண ராணி ரேஷ்மா, 10-க்கும் மேற்பட்ட வாலிபர்களை இதுபோல் ஏமாற்றி திருமண வலையில் வீழ்த்தி பணம், நகை பறித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications