பட்டினப்பிரவேசம்... மனம் குளிர்ந்த மதுரை ஆதீனம்... அமைச்சர் சேகர்பாபுவிற்கு பாராட்டு
பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சுமுக தீர்வு காணப்படும் எனக் கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. ஆனால், இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி: ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். கோயிலில் அரசாங்கம்தானே இருக்கிறது. அரசியல்வாதிகள்தானே அறநிலையத்துறை அமைச்சராகிறார்கள் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சுமுக தீர்வு காணப்படும் எனக் கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. ஆனால், இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
Recommended Video
2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம். இந்த நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்திருக்கிறார்.
அதே நேரம் பட்டின பிரவேச தடைக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ஆன்மீகவாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர தந்தை... ரகசிய வீடியோ எடுத்து போலீசில் சிக்க வைத்த மகள்
மகிழ்ச்சியான செய்தி வரும்
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மே 22ஆம் தேதிதான் பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நல்ல முடிவாக மகிழ்ச்சியான முடிவை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார். ஆதீனம் சார்பிலே இந்து சமய அறநிலையத்துறையிடம் தொடர்ந்து தொடர்பில் வைத்திருக்கிறார்கள். நல்ல ஒரு சுமூகமான ரம்மியமான மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மூலவராகவும் உற்சவராகவும் இருக்கக் கூடிய முதல்வர் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் கூறினார்.
மனம் குளிரும் அறிவிப்பு
அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. ஆத்திகர் நாத்திகர் என அனைவரின் மனங்களும் குளிரும் வகையில் நல்ல தகவல் வெளிவரும் என்றார். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் நடைபெற கலந்து பேசி வருவதாகவும் தெரிவிததார்.
மதுரை ஆதீனம் பேட்டி
கன்னியாகுமரி மாவட்டம், பாலபள்ளம் முத்துமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் போது, தமிழகத்தில் விடுமுறை அளிக்கபடாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும்.
நாஞ்சில் சம்பத் மீது பாய்ச்சல்
தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. மதுரை ஆதீனம் சங்கபரிவார் இயக்கங்களுக்கு சாமரம் வீசுவதாக நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாக சொல்கிறீர்கள். நாஞ்சில் சம்பத் யாருக்கு சாமரம் வீசுகிறார். முதலில் அவர் எந்த கட்சியில் இருந்தார், அடுத்து எங்கே போனார், இப்போது எங்கு இருக்கிறார். நான் இறைவனுக்கு மட்டுமே சாமரம் வீசுவேன். தருமபுரம் ஆதீனத்தை தூக்கிச் செல்வதை தடைசெய்தார்கள். போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்கிச் செல்வது, இஸ்லாமியர்கள் அவர்களது சமயம் சார்ந்த சடங்குகளுக்கு பல்லக்கு தூக்குவது இதை பற்றி எல்லாம் அவர் பேசுவாரா.
ஆன்மீகமும் அரசியலிலும்
ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். கோயிலில் அரசாங்கம்தானே இருக்கிறது. அரசியல்வாதிகள்தானே அறநிலையத்துறை அமைச்சராகிறார்கள். சர்ச், பள்ளிவாசல் போன்றவற்றில் அரசு தலையிடுவது இல்லை. நாம் கோயிலில் தலையிடுவதால் அரசியலும் ஆன்மிகமும் ஒன்றுதான்.
கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்
பிரதமரை சந்திக்க கூடிய நேரம் வரும்போது சந்திப்பேன். இவர்கள் ஓவராக சென்றால் பிரதமரை சந்திக்கவேண்டியதுதான். எனக்கு டெலிபோனில் மிரட்டல் விடுத்தார்கள். கோயிலுக்கு போகிறேன் என்று சொன்னதும், அங்குள்ள மீட்டிங்கில் பேசியவர்கள் 'ஆதீனம் இங்கு வரமுடியுமா, இங்குள்ள சுவரை கூட தொட விடமாட்டோம், திருப்பணி செய்ய விடமாட்டோம்' எனக் கூறினார்கள்.
அரசியல் ஆக்கியது யார்?
அரசியல்வாதி என்னவேண்டுமானாலும். பேசலாம் ஆன்மீகவாதி பேசக்கூடாதா என்று கேட்ட மதுரை ஆதீனம், பட்டினப் பிரவேசத்திற்கு எதிர்ப்பு இருப்பதால்தான், ஆதரவு அதிகமாக இருக்கிறது. பல்லக்கு சுமக்க எதிர்ப்பு ஏற்பட்டதால் நான் உட்பட தமிழ்நாடே சுமக்க தயாராக உள்ளது. பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சுமுக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஆன்மிகத்தில் பிரச்னை என்றால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.