தமிழக மக்கள் பொது சிவில் சட்டம் வேண்டும் என்கிறார்கள்.. ஸ்டாலின் புரிதல் இல்லாமல் உள்ளார்.. அண்ணாமலை
கன்னியாகுமரி: பொது சிவில் சட்டத்தால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்தான் அதிகம் பயன்பெறுவார்கள் எனவும் தமிழக மக்கள் பொது சிவில் சட்டம் வேண்டும் என்கிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:- தமிழக மக்கள் பொது சிவில் சட்டம் வேண்டும் எனச் சொல்கிறார்கள். வேண்டாம் என சொல்வது யார் என்று பார்த்தால் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கும் கூட்டம் வேண்டாம் என்று சொல்கிறது. அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பேசினார்.

இந்தியாவில் 1935 வரை பொது சிவில் சட்டம்தான் இருந்தது. வட மேற்கு எல்லைப்புற மாகாணம் 1935 வரை ஷரியத் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 1937-ல் வெவ்வேறு மாகாணங்களில் ஷரியத் சட்டத்தை கொண்டு வந்தார்கள். பல வழிபாடுகளை கொண்ட இந்துக்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொண்டோம். இந்தியா ஒருங்கிணைந்து இருக்க அனைத்து மதங்களும் இணைந்து பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
அம்பேத்கர் சொல்லியிருக்கும் சமூக நீதியை மறந்து விட்டீர்கள். அம்பேத்கர் ஒருங்கிணைந்த இந்தியாவாக இருக்க பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நாட்டில் பொது சிவில் சட்டத்தை பிரதமர் நரேத்திரமோடி கொண்டு வரப்போகிறார். பொது சிவில் சட்டத்தின் பயனாளிகள் இந்துக்கள் கிடையாது. இந்துக்களுக்கு ஏற்கனவே பொது சிவில் சட்டம் வந்துவிட்டது.
எனவே பொது சிவில் சட்டத்தின் முதல் பயனாளி இஸ்லாமிய சகோதரிகள், தாய்மார்கள்தான்.. திருமணம், விவாகரத்துக்கு என்ன முறை என்பதுபோன்ற வழிமுறைகள் வர இருக்கின்றன. இஸ்லாமிய பெண்களும் தந்தையின் சொத்தில் பங்கு பெற போகிறார்கள். அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் பயன் பெறுவார்கள். பொது சிவில் சடட்த்தில் கிறிஸ்தவர்களுக்கு அதிக பயன் உள்ளது.
ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த புரிதலும் இல்லாமல் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கிறார். பொது சிவில் சட்டத்தை எதிர்த்தால் சிறுபான்மையினர் ஓட்டு போட்டு விடுவார்கள் என ஸ்டாலின் மற்றும் அவருடன் இருப்பவர்கள் நினைக்கிறார்கள். சிறுபான்மை என்ற வார்த்தையை பாஜக பயன்பாடுத்தாது. இஸ்லாமிய, கிறிஸ்தவ சொந்தங்கள் மோடியின் பக்கம் எப்பவோ வந்து விட்டது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
முன்னதாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. பொது சிவில் சட்டத்தை நாடு தழுவிய அளவில் கடுமையாக எதிர்ப்போம் என ஏற்கனவே முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்திருக்கிறது. வரும் நாடளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பொது சிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கூட ஆதரவு மனப்பான்மையுடன் உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications