கன்னியாகுமரி காதலி கிரீஷ்மா.. காதலனுக்கு கலந்து கொடுத்தது பாராகுவாட்.. வெளியான மருத்துவ அறிக்கை
கன்னியாகுமரி: கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவ அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கல்லூரி மாணவரின் காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷத்தை கலந்து கொடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பெற்றோர் பார்த்த ராணுவ வீரரை திருமணம் செய்வதற்காக காதலனுக்கு கசாயத்தில் பூச்சிமருந்து கலந்து கொடுத்ததாக காதலி கிரீஷ்மா கைதாகி இருந்தார்.
கேரள மாநிலம், பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்த 23 வயதாகும் ஷாரோன் ராஜ் என்பவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிகிரி படித்து வந்தார்.கல்லூரி படித்த ஷாரோன் ராஜ்க்கு களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற மாணவியுடன் காதல் ஏற்பட்டது. இவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். காதல் ஜோடி பல இடங்களில் சுற்றித்திரிந்தனர்.

இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு கிரீஷ்மாவின் பெற்றோர், அவருக்கு ஷாரோன் ராஜ்க்கு பதில் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்ய விரும்பினார்கள். பெற்றோரின் விருப்பபப்படி ராணுவ வீரரை திருமணம் செய்ய முடிவு செய்த கிரிஷ்மாவிற்கு, நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்தநிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஷாரோன் ராஜுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்துபோனார். மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன் ராஜின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசாா் தீவிர விசாரணை நடத்தினர். அப்படி போலீஸ் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு அவரது காதலி கிரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் தான் அவர் இறந்தது தெரியவந்தது. பெற்றோர் பார்த்த ராணுவ வீரரை திருமணம் செய்வதற்காக காதலனுக்கு கசாயத்தில் பூச்சிமருந்து கலந்து கொடுத்து கிரீஷ்மா கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வழக்கில் ஷாரோன் ராஜின் காதலியான கிரீஷ்மா அபோது கைது செய்யப்பட்டார். மேலும், வழக்கில் தொடர்பு இருப்பதாக கிரீஷ்மாவின் தாயார் சிந்து, தாய் மாமா நிர்மல்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு விசாரணை கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே கசாயத்தில் கலந்து கொடுத்தது என்ன விஷம் என்பதை அறிய டாக்டர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக முயற்சி செய்தனர். இந்தநிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை தரப்பில் மருத்துவ ஆய்வு அறிக்கை நேற்று நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஷாரோன் ராஜுக்கு கொடுக்கப்பட்டது பாராகுவாட் என்ற விஷம் என்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. அது 15 மில்லி உடலுக்குள் சென்றாலே மரணம் நிச்சயம் என்று கூறும் மருத்துவர்கள், அந்த விஷத்தை முறிக்க மாற்று மருந்து இல்லை என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறம் எனில், கிரீஷ்மா, ஷாரோன் ராஜ் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி ஷாரோன் ராஜுக்கு விஷம் கொடுப்பதற்கு முன்பு காலையில் 7.30 மணிக்கு அந்த பாராகுவாட் விஷம் உடலுக்குள் சென்று எப்படி செயல்படும் என கிரீஷ்மா இணையதளத்தில் தேடியது தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் இருந்தது. அந்த ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விஷத்தின் தன்மையை தெரிந்து கொண்டுதான் கிரீஷ்மா அன்று காலை 10.30 மணியளவில் ஷாரோன் ராஜுக்கு கசாயத்தில் பாராகுவாட் விஷத்தை கலந்து கொடுத்துள்ளதாக அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) நடக்கிறது. கசாயத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு விசாரணை, தற்போது மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications