முகமூடி, துப்பாக்கி.. ஸ்கார்பியோவில் 2 பேர்.. 4 முறை சுடப்பட்ட எஸ்ஐ வில்சன்.. ஷாக்கில் கன்னியாகுமரி
சப்-இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நபர்கள் யார் என்று தெரியவில்லை
Recommended Video
கன்னியாகுமரி: மர்மநபர்கள் 2 பேருமே முகமூடி அணிந்து வந்திருக்கிறார்கள்.. 4 முறை துப்பாக்கியால் சுட்டு வில்சனை கொன்றிருக்கிறார்கள்.. தப்பி செல்லும்போது முகமூடியை கழற்றியபடியே ஓடுகிறார்கள்.. இவர்கள் யார் என்ற விசாரணையில் கன்னியாகுமரி போலீசார் படு தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
அந்த மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்கள்.. தப்பி ஓடிச்செல்லும்போது முகமூடியை கழற்றியபடியே ஓடுகிறார்கள்.. இது அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது...
கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளது. வழக்கமாக இங்கு இரு மாநில எல்லை வழியாக செல்லும் வாகனங்கள் சோதனையிட்டு அதன்பின்னரே அனுமதி வழங்கப்படும். எப்பவுமே 24 மணி நேரமும் இங்கு சோதனை செய்ய ஊழியர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.. அதனால் பரபரப்பாகவே இந்த பகுதி இருக்கும்.
வில்சன்
வழக்கம்போல் நேற்றிரவு சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் வேலையில் இருந்தார்.. இவருக்கு வயது 58 ஆகிறது.. அந்த பக்கமாக வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தார். அவருடன் மற்ற போலீசாரும் கூடவே இருந்தனர்.
ஸ்கார்பியோ
அந்த சமயம், கன்னியாகுமரி நோக்கி ஸ்கார்பியோ கார் ஒன்று வந்தது.. வில்சன் அந்த வண்டியை நிறுத்தி சோதனை செய்தார்.. சோதனை செய்து கொண்டிருந்தபோதே திடீரென அதில் உட்கார்ந்திருந்த 2 பேர் வில்சனை துப்பாக்கியால் 4 முறை சுட்டனர்.. மார்பு, வயிறு, தொடையில் குண்டுப்பாய்ந்த வில்சன் அங்கேயே சுருண்டு விழுந்தார்.
மர்ம நபர்கள்
துப்பாக்கி சத்தம் கேட்டு சக பணியாளர்கள் ஓடிவந்தனர்.. அதற்குள் மர்ம நபர்கள் வந்த வண்டியிலேயே அந்த பகுதியின் எதிரே இருந்த பள்ளிவாசல் வழியாக தப்பி சென்றுவிட்டனர்.. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய வில்சனை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தும் வில்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.
வந்தவர்கள் யார்?
காரில் வந்தவர்கள் கன்னியாகுமரிக்குள் சென்றுள்ளனர். அவர்கள் யார்? ஒரு உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கும் அளவுக்கு அவர்கள் அந்த ஸ்கார்பியோ காரில் எதை வைத்திருந்தார்கள்? வில்சன் காரில் என்ன பார்த்தார்? வந்தவர்கள் அப்பகுதியில் கொல்லப்பட்ட 3 நக்சலைட்டுக்களின் கூட்டாளிகளா? கேரளா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களா? என எதுவுமே தெரியவில்லை.. வழக்கமாக, கேரளாவுக்கு ரேஷன் அரிசி தொடங்கி, கனிமவளங்கள் போன்றவை கடத்தப்படுவது நடக்கும்.. ஒருவேளை அப்படிக்கூட கடத்திவந்திருப்பார்களா என தெரியவில்லை.
போலி எண்
சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி விரைந்து வந்தார்.. தற்போது வரை விசாரணை நடந்து வருகிறது.. காரில் வந்தவர்களை பிடிக்கும் பணியும் நடக்கிறது.. வந்தது ஸ்கார்பியோ என்றாலும், அந்த ரிஜிஸ்டிரேஷன் நம்பரை பார்த்தால், மாருதி சுசுகி வாகனம் என்று பதிவாகி உள்ளது.. அந்த நம்பரை பிடித்து விசாரித்தால், அது வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமானது என்றும், ஒட்டன் சத்திரம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வண்டி என்பதும் தெரியவந்தது. நம்பர் பிளேட்டைகூட போலியாக மாற்றி எடுத்து வந்துள்ளனர்.
முதல்வர் உதவி
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், சுட்டுக்கொன்றவர்களை உடனே கைது செய்யவும் தென்மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இவ்வழக்கு புலன் விசாரணையில் உள்ளது" என்றார்.