”அன்றும், இன்றும் ஒரே கோரிக்கை தான்” ராகுல் காந்தியை சந்தித்த அனிதா சகோதரர் பேட்டி!
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தியை சந்தித்த அனிதா சகோதரர் மணிரத்தினம், தான் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து கூறியுள்ளார்.
இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 2வது நாள் யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அதிகாலை தொடங்கினார். இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
ராகுல் காந்தியுடன் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் யாத்திரை செய்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுடன் பயணம் செய்து வருகின்றனர்.
சீனுக்கு வந்த ஆனந்த் சீனிவாசன்.. செல்பி எடுக்க போட்டி! ராகுல் காந்தியின் கொடியேந்தி ஒற்றுமை யாத்திரை
மக்களை சந்திக்கும் ராகுல்
அகஸ்தீஸ்வரத்தில் இரண்டாவது நாள் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் மக்களை சந்திக்கிறார். இன்று காலை யாத்திரை தொடங்கியது முதலே பல்வேறு தரப்பினரையும் ராகுல் காந்தி சந்தித்து பேசி வருகிறார். அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மொழிபெயர்த்து கூறி வருகின்றனர்.
அனிதா குடும்பத்தை சந்தித்த ராகுல்
இந்த நிலையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார். அவரது சகோதரரை சந்தித்த ராகுல் காந்தி, அவருடன் சில நிமிடங்களில் நடந்துகொண்டே பேசினார். அவரின் பேசியதை காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு மொழிபெயர்த்து கூறினர்.
ராகுல் சந்திப்பால் விவாதம்
தொடர்ந்து ராகுல் காந்தி உடனான சந்திப்பு குறித்து அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்குவதை அறிந்து அவரை சந்திக்க இங்கு வந்தேன். அவரிடம் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன்.
சந்திப்பால் மகிழ்ச்சி
மேலும் கடந்த தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார். அதை அவரிடம் நினைவூட்டினோம். நாங்கள் சொன்னதை அவர் கவனமாக கேட்டுக்கொண்டார். இந்த நடைப்பயணத்தின் போது அவரை சந்தித்து நீட் தேர்வுக்கான விலக்கு கோரிக்கையை வலியுறுத்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளதாக தெரிவித்தார்.