உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.34.8 லட்சம் பறிமுதல்… பறக்கும் படையினர் அதிரடி
Recommended Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூபாய் 34.8 லட்சத்தைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேரேகால்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தனியார் பேருந்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அல்பீல்தீன் என்பவரிடமிருந்து ரூ 34 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மக்களவை தேர்தல் கண்காணிப்பு மற்றும் சோதனை பணிக்காகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளில், தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்தை வழிமறித்து சோதனை செய்த அதிகாரிகள் பேருந்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அல்பீல்தீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ 34 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்ததைக் கண்டுபிடித்தனர்.
பச்சை கிளியா? அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி!
இதனைத் தொடர்ந்து பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை நாகர்கோவிலில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பணம் எடுத்து வந்த அல்பீல்தீனிடம் பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் மற்றும் குளச்சலில் இந்த பணத்தை உறவினர் ஒருவரிடம் கொடுக்க வந்ததாகத் தெரிகிறது.
அதன் அடிப்படையில் இது ஹவாலா பணமா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களவை தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் கடந்த 10 ஆம் தேதி மாலை 5 மணி முதல் தற்போது வரை 5 ஆட்டோக்கள் 8 சொகுசு கார்கள், 46 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 13 மிக்சிக்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.