தமிழக அரசு தரும் ரூ.7 லட்சம், மத்திய அரசு தரும் 1.50 லட்சம்..அடுக்குமாடி வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மானிய விலையில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.1.50 லட்சமும், மாநில அரசின் பங்களிப்பாக ரூ.7 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.2.11 லட்சம் பயனாளிகளிடமிருந்து பங்களிப்பாக அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
குடியிருக்க வீடு வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள்.. ஆனால் இன்றைய சம்பளத்தில் ஒருவர் சம்பாதித்து, சேமித்து வீடு கட்டுவது என்பது எளிதானது அல்ல.. இந்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் வீடு கட்ட மானியம் வழங்குகின்றன. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டம் என இரண்டு திட்டங்களில் வீடு கட்ட விண்ணப்பிக்க முடியும். இரண்டு திட்டங்களிலுமே அரசுகள் மானியங்களை வழங்குகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மானிய விலையில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளன. இதுபற்றி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கன்னயாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் சொந்த வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரத்தில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
கன்னியாகுமரி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் உள்ள இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 400 சதுரஅடி பரப்பளவில் ஒரு வரவேற்பு அறை, ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை மற்றும் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த திட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு குடியிருப்புக்கான மதிப்பீட்டு தொகை ரூ.10.61 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.1.50 லட்சமும், மாநில அரசின் பங்களிப்பாக ரூ.7 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ2.11 லட்சம் பயனாளிகளிடமிருந்து பயனாளி பங்களிப்பு தொகையாக பெறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தூய்மை பணியாளர்கள் நலவாரிய அட்டை நகல் பெற்றுள்ள 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தூய்மை பணி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியாளர்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ சொந்தமாக வீடோ, நிலமோ இருத்தல் கூடாது.
மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். இந்த தகுதியுள்ள பயனாளிகள் தூய்மை பணியாளர் நலவாரிய அட்டை நகல், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமானச் சான்று, பணிபுரியும் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் பொன்ற ஆவணங்களுடன் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications