கன்னியாகுமரியில் அயோத்தி ராம ராஜ்ஜிய யாத்திரை.. பேரணியாக செல்ல போலீஸ் அனுமதி மறுத்ததால் பரபரப்பு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அயோத்தி ராம ராஜ்ஜிய யாத்திரை பேரணியாக செல்ல போலீஸ் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா அமைப்புகள் பேரணிகள், ஊர்வலங்கள் நடத்த தீவிரமாக முயற்சிக்கின்றன. கடந்த அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டது. ஆனால் தமிழக அரசு நடவடிக்கையால் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு போனது.
சென்னை உயர்நீதிமன்றம் ஆதார் கார்டு ஒப்படைக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளுடன் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி தந்தது. ஆனால் இந்த நிபந்தனைகளை ஏற்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மறுத்தது. இதனால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது. பின்னர் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்பட்டது. இதில் கம்பு, ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.
சீண்டித்தான் பாருங்க- சிதைச்சுடுவோம்..சீனா,பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வார்னிங்
கன்னியாகுமரியில் ரதம்
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இந்துத்துவவாதிகள் புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளனர். அயோத்தியில் இருந்து புறப்பட்ட ராம ராஜ்ஜிய யாத்திரை ஒன்று கன்னியாகுமரி வந்தது. மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இந்த ராமராஜ்ஜிய யாத்திரைக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா இயக்கப் பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
போலீஸ் அனுமதி மறுப்பு
இதனைத் தொடர்ந்து ராம ராஜ்ஜிய யாத்திரையுடன் பேரணியாக வலதுசாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் வலதுசாரிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் பேரணி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டது.
2018 சர்ச்சை
இதேபோல 2018-ம் ஆண்டும் ராம ராஜ்ஜிய யாத்திரை என்ற பெயரில் ஒரு ரதம் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது. அப்போது தமிழகத்தில் இந்த ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போதும் தமிழகத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
அத்வானி யாத்திரை
வலதுசாரிகளின் மூத்த தலைவரான அத்வானி, 1990களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தினார். இந்த ரதயாத்திரையால்தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மிகப் பெரும் மத மோதல் ஏற்பட்டது. இதன் உச்சமாக 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.