நீ சோத்த திங்கிறியா.. பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! சுசீந்திரம் தேர் திருவிழாவில்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமலையன் சுவாமி கோயில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து அமைப்பினர் "பாரத் மாதா கி ஜே" என கோஷமிட்டதால் ஆத்திரமடைந்து, "நீ சோற்றை திங்கிறீயா இல்ல..." என கோபமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுசீந்திரத்தில் தாணுமாலயன் கோயில் திருத்தேரோட்டம் மார்கழி மாதத்தையொட்டி இன்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அப்போது அங்கிருந்த இந்து அமைப்பினர் சிலர், அமைச்சர்கள் முன்பு "பாரத் மாதா கீ ஜே" என முழங்கினார். இதையடுத்து அவர்களை சேகர்பாபு கண்டித்தார். எனினும் அவர்கள் அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் அந்த கோஷத்தை எழுப்பினர்.
என்ன திங்குறே
இதனால் கடும் கோபமடைந்த சேகர்பாபு, "நீ வயிற்றுக்கு சோத்த திங்கிறீயா இல்ல..." என திருத்தேரோட்டம் என்றும் பாராமல் கத்தினார். இதனால் அங்கிருந்த பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கோயில்களில் வன்சொல் சொல்லக் கூடாது, புறம் பேசக் கூடாது, தெய்வத்தை மட்டுமே நினைக்க வேண்டும் என்ற பக்தர்கள் கடைப்பிடித்து வரும் நிலையில் சேகர்பாபு இவ்வாறு பேசியது பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.
சொர்க்கவாசல்
மேலும் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு ஆய்வு செய்ய கடந்த 31 ஆம் தேதி சேகர்பாபு வந்திருந்தார். அப்போது முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.
10 பேருக்கு அனுமதி
அப்போது கோயிலுக்குள் 10, 15 பேர் சென்றதாக சொல்லப்படுகிறது. மற்றவர்களை விட சேகர்பாபு மறுத்த போது தமிழிசை கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஒரு முன்னாள் ஆளுநர் என்று கூட பாராமல் ஏற்கெனவே 10 பேர் போய்ட்டாங்க. இவங்களை எல்லாம் உள்ளே அனுப்ப முடியாது என கோபமாக தெரிவித்த போது அவருடன் தமிழிசை வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.
25 ஆம் தேதி கொடியேற்றம்
இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் மார்கழி விழா டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடந்தது. இன்று திருத்தேரோட்ட வைபவத்திற்கு பிறகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
127 திருக்கோயில்கள்
அப்போது அவர் கூறுகையில், எல்லா வளமும் நலமும் தரும் சுசீந்திரம் கோயில் மார்கழி மாத தேரோட்டத்தை இன்று நானும் இந்த மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜும் பொதுமக்களுடன் இணைந்து தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 300 திருக்கோயில்கள் திருப்பணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, இதுவரையில் 127 திருக்கோயில்கள் குடமுழுக்கு காணப்பட்டிருக்கிறது.
400 ஆண்டுகள் பழமை
இந்த மாவட்டத்தில் 400 ஆண்டுகளுக்க பிறகு திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், திருவிதாங்கூர் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் போன்றவை இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 திருக்கோயில்களுக்குகு சொந்தமான 20 திருத்தேர்களுக்கு 1.85 கோடி ரூபாய் செலவில் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைத்து தரப்பட்டுள்ளன. அதேபோல் 6 திருக்கோயில்களுக்கு சொந்தமான 8 திருக்குளங்கள் 2.19 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன.
தெப்பக்குளம்
தாணுமாலயன் திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் 34.50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டதில் எதிர்பாராதவிதமாக தடுப்புச் சுவரில் சரிவு ஏற்பட்டதால் அந்தப் பணிகளுக்கு மறுஒப்பந்தம் கோர ஆணையர் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் ஆணையர் அனுமதி வழங்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் அந்தப் பணியை தொடங்குவோம்.
பாஜகவை சேர்ந்த நண்பர்கள் சிலர் ஏப்ரல் மாதம் நடக்கும் திருவிழாவிற்குள் இந்த திருக்குளத்தை செப்பனிட்டு தெப்பத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற கோயில் இணை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என சேகர்பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications