கன்னியாகுமரியில் காங்கிரசுக்கு அதிக வாய்ப்பு... கிட்ட நெருங்கும் பொன்னர்... தந்தி டிவி சர்வே
சென்னை: கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலும் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக இருந்த வசந்தகுமார், கொரோனா காரணமாகக் கடந்தாண்டு உயிரிழந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இதுவரை பொன். ராதாகிருஷ்ணன் மூன்று முறை போட்டியிட்டுள்ளார். அதில் 2014ஆம் ஆண்டு மட்டுமே அவர் வெற்றி வாகை சூடினார்.
மறுபுறம் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்த குமாரின் மகன் விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தந்தி டிவி தனது கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் 46-52% வாக்குகளைப் பெற்று வெல்லும் என்று தந்தி டிவி கூறியுள்ளது. மேலும், பாஜக 41-47% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் 3-6 %, மநீம+2-5% வாக்குகளைப் பெறும் என்று தந்தி டிவி தெரிவித்துள்ளது.