கன்னியாகுமரியில் தாயை காப்பாற்ற வீட்டை அடகு வைத்து கடன் வாங்கிய மகன்.. இப்படியா ஆகணும்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நிதி நிறுவனத்தில் தந்தை வாங்கிய கடனை செலுத்துமாறு வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் ஒர்க் ஷாப் ஊழியர் பிரதீஷ் செய்த செயலால் உறவினர்கள் அரசு கலங்கி போயிருக்கிறார்கள். வீட்டை அடமானம் வைத்து அவசர தேவைக்கு கடன் வாங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள சிதறால் ஒற்றையால்விளையை சேர்ந்தவர் பிரபாகரன், கூலி தொழிலாளியாவார். இவருடைய மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு 29 வயதாகும் பிரதீஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். பிரதீஷ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனின் மனைவி மகேஸ்வரி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக பிரபாகரன் வீட்டை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றார். இதற்காக மகன் பிரதீஷ் சாட்சி கையெழுத்து போட்டிருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி மகேஷ்வரி இறந்தார். அதன்பின்பு கடன் தவணையை பிரபாகரன் செலுத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது இதனால் கேரளாவுக்கு வேலை சென்றுவிட்டார். இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கடன் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் பிரதீஷை செல்போனில் தொடர்பு கொண்டு கடனுக்கான தொகையை கட்டுமாறு வற்புறுத்தி வந்தனர். அவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரதீஷ் மனமுடைந்த நிலையில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தவணையை கேட்டு வீட்டுக்கு வந்தனர். அத்துடன் கடன் தொகையை உடனே கட்டுமாறு வலியுறுத்தி வீட்டின் முன்பகுதியில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றார்கள். இதை பார்த்த பிரதீஷ் மிகுந்த மன வருத்தம் அடைந்தார். தொடர்ந்து அவர் மதியம் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார்.
பின்னர் அவர் வெகுநேரமாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி கதவை தட்டியுள்ளார். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் பிரதீஷ் கொடுக்க வில்லையாம். இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பிரதீஷ் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அருமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அருமனை போலீசார் சம்பவ இடதுக்கு வந்து பிரதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தந்தை வாங்கிய கடனை செலுத்தக்கோரி நிதி நிறுவனம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிதால் ஒர்க்ஷாப் ஊழியர் உயிரை விட்ட சம்பவம் கன்னியாகுமரி அருமனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications