சந்தியாவின் தலை எங்கே.. சிபிஐ விசாரணை கோரும் பெற்றோர்.. கலெக்டரிடம் மனு
சந்தியா கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என பெற்றோர் மனு செய்துள்ளனர்.
Recommended Video
கன்னியாகுமரி: "இவ்வளவு நாள் ஆகியும் இன்னும் சந்தியாவின் தலை கிடைக்கவில்லை.. இந்த கொலை வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதால், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை வேண்டும்" என்று சந்தியாவின் பெற்றோர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
சென்னை பெருங்குடியில் கடந்த ஜனவரி 21-ம் தேதி ஒரு பெண்ணின் 2 கால்கள் மற்றும் ஒரு கை கண்டெடுக்கப்பட்டன. இது சம்பந்தமாக பள்ளிக்கரணை போலீசார் மிக விரைவாகவும் சாதுர்யமாகவும் விசாரணை நடத்தினர்.
2 வாரங்கள் ஆன நிலையில், கன்னியாகுமரி பூதப்பாண்டி, ஞானம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்பவரின் உடல் பாகங்கள்தான் குப்பையோடு குப்பையாக கிடந்தது எனத் தெரியவந்தது.
கொலையாளி கைது
இதையடுத்து போலீசார் துாத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்தான் இந்த கொலையை செய்தார் என்பதை உறுதி செய்து, அவரை கைதும் செய்துவிட்டனர். ஒழுக்கம் தவறியதால் சந்தியாவை கொலை செய்ததாக பாலகிருஷ்ணன் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
தலையை காணோம்
அத்துடன், சந்தியாவின் உடல்பாகங்களை எங்கு வீசினார் என்றும் தெரிவித்ததையடுத்து, அவை கண்டெடுக்கப்பட்டன. ஆனால் சந்தியாவின் தலை மற்றும் ஒரு கை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. அதை தேடும் முயற்சியிலும் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் உறுப்புகள்
ஆனால், இந்த கொலை வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக சந்தியாவின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது சம்பந்தமாக இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை அவர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது, சந்தியாவின் உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில் உடலின் முக்கிய உறுப்புகள் விற்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த கும்பலுடன் பாலகிருஷ்ணனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
கோரிக்கை
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டரிடம் சந்தியாவின் பெற்றோர்கள் புகார் மனுவாக அளித்தனர். இப்போது சந்தியாவின் குழந்தைகள் பாலகிருஷ்ணன் குடும்பத்தில் இருப்பதால், அவர்களை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கோரிக்கையாக விடுத்துள்ளார்கள்.