கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் 5 தொகுதிகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. நாகர்கோயில் தொகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக அறியப்படும் சூழலில், மீனவ சமுதாய மக்கள் மத்தியில் மட்டும் விஜய்க்கு ஆதரவு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் சூழலில், மாவட்ட வாரியாக ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவை விடவும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் வேகம் எடுத்துள்ளது. கன்னியாகுமரியில் மொத்தமாக 6 தொகுதிகள் இருக்கின்றன.

கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பாக தளவாய் சுந்தரம் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இவரை எதிர்த்து இம்முறை திமுக நேரடியாக களமிறங்க தயாராகி வருகிறது. இந்த தொகுதியில் சீட்டுக்காக பலரும் முட்டி மோதி வருகின்றனர். மீனவ கிராமங்களில் விஜய்க்கு நல்ல ஆதரவு அலை வீசுகிறது. ஆனால் மற்ற சமுதாயங்களில் பெரியளவு ஆதரவு இல்லை. இதனால் திமுக வேட்பாளரை பொறுத்து இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அதேபோல் நாகர்கோவில் தொகுதியை பொறுத்தவரை பாஜகவின் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ-வாக உள்ளார். மீண்டும் இவர் சீட் எதிர்பார்க்கும் சூழலில், பொன்.ராதாகிருஷ்ணனுடன் சீட் எதிர்பார்ப்பதாக தெரிய வந்துள்ளது. கனிமொழி கைகாட்டுபவரே வேட்பாளர் என்பதால், மேயர் மகேஷ் மற்றும் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இருந்தாலும் அதிமுக கூட்டணி மீண்டும் வெல்லும் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.
குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பிரின்ஸ் 3வது முறையாக எம்எல்ஏ-வாக இருக்கிறார். இதனால் இம்முறை புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படலாம். மீனவர்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால், விஜய் முக்கிய பங்காற்றுவார். இதனால் களம் திமுகவுக்கு சாதகமாகவே இருப்பதாக தெரிகிறது.
பத்மநாபபுரம் தொகுதியை பொறுத்தவரை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மீண்டும் மனோ தங்கராஜ் போட்டியிடும் சூழலில், அதிமுக சார்பாக மாவட்டச் செயலாளர் ஜெயசுதர்சன் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. நாடார் சமூக வாக்குகள் அதிகம் இருப்பதால், கனிமொழியின் பேச்சிற்கு மறுபேச்சு இருக்காது. இதனால் திமுக வெல்லும் தொகுதி என்றே பலரும் சொல்கிறார்கள்.
விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பாக விஜயதரணி மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்காக மீண்டும் தாரகை கத்பர்ட் சீட் எதிர்பார்க்கிறார். விஜயதரணிக்கு கடுமையான அதிருப்தி நிலவி வரும் சூழலில், பாஜகவிலும் பெரியளவு பணியாற்ற ஆட்கள் இல்லை. சிறுபான்மை சமூக வாக்குகள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால், திமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்று பார்க்கப்படுகிறது.
கிள்ளயூர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் போட்டியிடுவது உறுதி. இந்த தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சிறுபான்மை வாக்குகள் மற்றும் நாடார் சமூக வாக்குகள் ஒருங்கிணைக்கப்படும் பட்சத்தில் எளிதாக திமுக கூட்டணியால் வெல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications