கன்னியாகுமரி வீட்டில் அவ்வளவும் நாகப்பாம்புகள்.. பெரிய 'தலை' எட்டி பார்த்த போது தான் பெரிய ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பள்ளம்துறை லூர்து காலனியை சேர்ந்த ரீகன் என்பவர் பழைய வீட்டின் அருகே புதிய வீடு கட்டி வருகிறார். இதற்காக பழைய வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் பழைய வீட்டில் பீரோவை தூக்கி புதிய வீட்டிற்கு மாற்ற முயன்றார். அப்போது பூரோவை தூக்கிய போது, குவியல் குவியலாக 24 நாகப்பாம்பு குட்டிகள் பிடிபட்டன. மேலும் 7 முட்டைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ளது பள்ளம்துறை லூர்து காலனி.இங்கு மீன்பிடி தொழிலாளியான 30 வயதாகும் ரீகன் வசித்து வருகிறார். ரீகன் தற்போது தனது பழைய வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். புதிய வீடு கட்டுமானத்திற்காக, தனது பழைய வீட்டை பூட்டிவிட்டு கடந்த ஒரு ஆண்டாக குடும்பத்துடன் இனயம் பகுதியில் குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் ரீகன் தனது புதிய வீட்டிற்கு வருகிற 30-ந் தேதி புதுமனை புகுவிழா நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். புதிய வீட்டின் பின்புறம் உள்ள தனது பழைய வீட்டில் இருந்து பீரோ, கட்டில் போன்ற பொருட்களை புதிய வீட்டிற்கு மாற்ற விரும்பினார். அதேபோல் பழைய வீட்டை இடித்து அகற்ற ரீகன் முடிவு செய்தார்.
இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றும் பணி நேற்று நடந்து கொண்டிருந்தது. இந்த பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒரு அறையில் இருந்த பீரோவை தூக்க முயன்ற போது அதன் அடியில் இருந்து ஒரு பெரிய நல்ல பாம்பு படம் எடுத்தபடி சீறிக்கொண்டு வேகமாக வெளியே வந்தது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். தொடர்ந்து அந்த பாம்பு அங்கிருந்து தப்பி சென்றது.
பாம்பு சென்றதை உறுதி செய்த தொழிலாளர்கள் பீரோவை அகற்றினர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தனர். பீரோவின் அடியில் ஒரு பொந்தில் ஏராளமான பாம்பு குட்டிகள் குவியல் குவியலாக நெளிந்து கொண்டிருந்து. மேலும் பாம்பு குட்டி குவியலுக்கு இடையே முட்டைகளும் கிடந்தன.
இதுகுறித்து பாம்புபிடி வீரரான சுந்தர தாசுக்கு அவர்கள் தகவல் தந்தனர். சுந்தரதாஸ் வனத்துறையில் பாம்புபிடி வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் நேரில் வந்து பொந்தின் உள்ளே இருந்த பாம்பு குட்டிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தார். இதில் 24 நல்ல பாம்பு குட்டிகளும், 7 பாம்பு முட்டைகளும் இருந்தன. முட்டைகளை கையால் தொட்ட உடனே பொரிக்க தொடங்கியது என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பாம்பு குட்டிகளையும், முட்டைகளையும் சுந்தரதாஸ் ஒரு பையில் அடைத்து வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். இந்த பாம்பு குட்டிகளை தற்பொழுது பிடிக்காவிட்டால் அவை பெரியதாக வளர்ந்து அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் விஷப்பாம்புகளின் கூடாரமாக மாறி இருக்கும்.. நல்ல வேளையாக அனைத்து பாம்புகளும் பிடிக்கப்பட்டு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதேநேரம் தப்பி சென்ற பெரிய நல்ல பாம்பு அந்த பகுதியில் வேறு எங்கோ போய் பதுங்கி கொண்டது. வீட்டில் பீரோவின் அடியில் இருந்து குவியல் குவியலாக 24 பாம்பு குட்டிகள் பிடித்த சம்பவம் நாகர்கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications