கன்னியாகுமரியில் நிவாரணப் பணிகள்; வேகம் போதாது; இன்னும் தீவிரம் தேவை; வேல்முருகன் வேண்டுகோள்!
கன்னியாகுமரி: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பழையாறு, தாமிரபரணி ஆறு, இரணியல் வள்ளியாறுகள் நிரம்பியதை அடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன.
வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல், வாழை, ரப்பர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தாழாக்குடி, செண்பகராமன்புதூர், சுசீந்திரம், தோவாளை, பரசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள 19 முகாம்களில், 500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொது மக்களை மீட்க விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் பாத்திரங்கள், உணவுப்பொருட்களை இழந்து வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு, தடையின்றி உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ளவர்களுக்கு, உணவு, மாற்று உடைகள் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும், துயரமிகுந்த இந்த பேரிடர் காலத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மழை வெள்ளப் பாதிப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.












Click it and Unblock the Notifications