Exclusive: ஒரு பக்கம் பிரதமர்.. மற்றொரு பக்கம் ராகுல்.. பற்றிய பதற்றம்.. விவரிக்கும் விஜய் வசந்த் MP
கன்னியாகுமரி: முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழையும் போது தன்னுடைய உடல் சிலிர்த்ததாக கூறுகிறார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக அவையில் பதவியேற்கும் போது தனக்கு பதற்றம் பற்றிக் கொண்டதாக மனம் திறந்துள்ளார் விஜய் வசந்த்.
முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற அனுபவம் எப்படி இருந்தது என்பது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் பின்வருமாறு;
தமிழில் பதவி பிரமாணம்.. வியந்து போன ராஜ்நாத்.. தோளில் கை போட்ட ராகுல் காந்தி.. விஜய் வசந்த் கலக்கல்
நெகிழ்ச்சி
''பெரிய பெரிய ஆளுமைகள், சான்றோர்கள் எல்லாம் அலங்கரித்த அவைக்கும் நாமும் செல்கிறோம் என்று நினைக்கும் போதே நெகிழ்ச்சியாக இருந்தது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் தான் நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றேன். அம்மா, மனைவி, குழந்தைகள், என யாரையும் அழைத்துச் செல்லமுடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை அளித்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குடும்பத்தினரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வர அனுமதியில்லை. கடந்த 2019-ம் ஆண்டு அப்பா பதவியேற்கும் போது நான் உட்பட குடும்பத்தினர் அனைவரும் நேரில் வந்து பார்த்தோம்.''
அப்பா இடத்தில்
''இப்போது அப்பாவின் இடத்தில் நான் நிற்கிறேன். பதவியேற்பதற்காக சபாநாயகர் எனது பெயரை கூறி அழைத்த போது, பதற்றத்துடன் தான் இருக்கையில் இருந்து அவையின் மையத்துக்கு வந்தேன். ஒரு பக்கம் பிரதமர் பார்க்கிறார், இன்னொரு பக்கம் ராகுல் ஜி பார்க்கிறார், இதுமட்டுமல்லாமல் தேசத்தின் பல முக்கியத் தலைவர்கள் அங்கு அமர்ந்து என்னை பார்க்கின்றனர். இதனால் அந்த தருணத்தில் என்னையறியாமல் ஒரு வித படபடப்பு ஏற்பட்டது.''
ராகுல் சந்திப்பு
''ராகுல்காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த போது உங்களுக்கு ஒரு கிஃப்ட் வைத்திருக்கிறேன் சார் என்று கூறி அப்பா எழுதிய புத்தகம் ஒன்றை கொடுத்தேன். அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட அவர், என்னை அழைத்து தனது அருகில் நிறுத்தி புகைப்படம் எடுக்கக்கூறினார். அப்பாவின் சேவை காங்கிரஸ் கட்சிக்கு அளப்பறியது என்றும் அவரை போல் நீங்களும் கட்சியில் செயல்பட வேண்டும் எனவும் என்னை வாழ்த்தினார். பிறகு புறப்படும் போது, அப்பா எழுதிய புத்தகத்தின் அட்டையை பார்த்த அவர் நிச்சயம் படிக்கிறேன் என்று கூறினார்.''
கடமை
''இதில் ஒரு டிவிஸ்ட் என்னவென்றால் ராகுல் ஜியை சந்திக்கமாட்டோமா, அவருடன் ஒரு புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய காலங்கள் எல்லாம் உண்டு. தேர்தலுக்கு முன்னர் ராகுல் தமிழகம் வந்தபோது கூட அவருடன் என்னால் ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவைல்லை. அப்படிபட்ட எனக்கு இன்று ஒன்றாக அவருடன் அவையில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.''
தமிழ்நாடு இல்லம்
''எனக்கு இன்னும் டெல்லியில் வீடு ஒதுக்கப்படவில்லை, இரண்டு மாத காலம் ஆகும் என்கிறார்கள். அதனால் இப்போது தமிழ்நாடு இல்லத்தில் தான் தங்கியிருக்கிறேன். இதனிடையே கன்னியாகுமரி தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவிருக்கிறேன்.''
போராட்டம்
''எம்.பி.யாக நான் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றேன். கடந்த ஒரு வாரமாகவே மக்களவையில் பெகாசஸ் உள்ளிட்ட இன்னும் சில முக்கிய விவகாரங்கள் பற்றித் தான் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.'' என்று தனது முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அனுபவத்தை ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துள்ளார் விஜய் வசந்த்.