விஜயதரணியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்! மிகப் பெரிய துரோகம்! விஜய் வசந்த் ஆவேசம்!
கன்னியாகுமரி: விஜயதரணியை ஒரு போதும் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆவேசம் காட்டியுள்ளார்.
விஜய் வசந்தா இப்படி பேசுவது என்று ஆச்சரியப்படும் வகையில் விஜயதரணிக்கு எதிராக இப்படி அனல் கக்கியுள்ளார். விஜயதரணி மாற்றுக்கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், செய்த மிகப்பெரிய துரோகம் என்றும் என்றும் விஜய் வசந்த் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக விஜய் வசந்தை பொறுத்தவரை பொறுமையான சுபாவம் கொண்டவர். யாரையும் அவ்வளவு எளிதாக விமர்சிக்கமாட்டார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதவர். நேற்று வரை விஜயதரணியை அக்கா என்று குறிப்பிட்டு அழைத்தவர், இன்று அவர் பாஜவில் சேர்ந்த தகவலை அறிந்து தனது ஆதங்கத்தை சமூக வலைதளப் பக்கங்களில் கொட்டித் தீர்த்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் சீட் எதிர்பார்த்து கடும் முயற்சிகளை மேற்கொண்டார் விஜயதரணி.
ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. வசந்தகுமாருக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இதையடுத்து வசந்தகுமார் மறைவுக்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி.சீட் வாங்க மீண்டும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதும் அந்த முயற்சியில் தோல்வி மட்டுமே மிஞ்சியது. விஜய் வசந்துக்கு காங்கிரஸ் மேலிடம் எம்.பி.சீட் கொடுத்தது. தொடர்ந்து வசந்தகுமார் குடும்பத்திடம் அவரால் வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் வசந்தகுமார் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. இந்த தகவலை ஒன் இந்தியா தமிழ் கூட சுட்டிக்காட்டியிருந்தது. இந்நிலையில் தான் அந்த விரக்தியில் விஜயதரணி பாஜகவில் ஐக்கியமாகி காங்கிரஸ் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனிடையே விஜயதரணியின் இந்த இணைப்பு நிகழ்வை பாஜகவில் உள்ள சீனியர்கள் சிலரே விரும்பவில்லை எனத் தெரிகிறது.
அதேபோல் விஜயதரணி பாஜகவில் இணைந்தது பற்றி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள திமுக எம்.பி. செந்தில்குமார், இதெல்லாம் ஒரு நாள் கூத்து, பிள்ளை பிடிக்கும் கூட்டத்தை போல் பாஜக எம்.எல்.ஏ.க்களை பிடிப்பதாக சாடியுள்ளார். மேலும், டாக்டர் சரவணன், கு.க.செல்வம் ஆகியோருக்கு பாஜகவில் என்ன நடந்தது என்பதை இந்த நாடறியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications