அதிகரிக்கும் கொரோனா.. குமரி கோவில்களில் வழிபாட்டுக்கு 'திடீர்' தடை.. பக்தர்கள் ஷாக்
கன்னியாகுமரி: கொரோனா மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக குமரி கோவில்களில் வழிபாட்டுக்கு தடை விதித்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இரண்டாம் அலை என்று ஓப்பனாக அறிவிக்கவில்லையே தவிர, வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த மாதம் 100ல் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்று, இப்போது 100ல் 20 பேர் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக குமரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குமரி மாவட்ட கோவில்களுக்கு, தமிழக அறநிலையத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
கோவிலுக்கு வருகிற பக்தர்களுக்கு பிரசாதம், அர்ச்சனை, வழிபாடுகள் நடத்தவோ, தீர்த்தம் கொடுக்கவோ கூடாது. திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் ஏதேனும் நடத்த வேண்டிய நிர்பந்தம் உண்டு என்றால், மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்ற பிறகு நடத்தலாம் என கூறியுள்ளது.
மேலும், கோவிலுக்கு வருகிற பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும், கைகளை நன்றாக கழுவிய பின்பே உள்ளே அனுமதிக்க வேண்டும், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் கூடாமல் இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் நிலையில், கொரோனா காரணமாக கோவில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.