எதிரெதிர் துருவங்கள் ஒரே மேடையில்! செந்தில்பாலாஜி அருகில் அண்ணாமலை! 12 ஆண்டு பிளாஷ்பேக்!
12ஆண்டுகளுக்கு முன்னர் எதிரெதிர் துருவங்கள் ஒரே மேடையில்.
கரூர்: அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஒரே மேடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
கடந்த 12ஆண்டுகளுக்கு முன்னர் கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு நடைபெற்ற போது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்பாலாஜியும், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற கேண்டிட்டாக அண்ணாமலையும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரெதிர் துருவங்கள்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வருபவர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது செந்தில்பாலாஜியை தூக்கி போட்டு மிதிப்பேன் என அண்ணாமலை கொந்தளித்ததும், பதிலுக்கு அண்ணாமலை ஒருஅரை வேக்காடு என செந்தில்பாலாஜி விமர்சித்ததும் யாராலும் மறக்க முடியாது.

ரஃபேல் வாட்ச்
அதேபோல் அண்மையில் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரத்தை பெரிது படுத்தியதில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முக்கிய பங்குண்டு. மேலும், விமானத்தின் அவசரக்கால கதவு திறக்கப்பட்ட நிகழ்வையும் முதல் ஆளாக பொதுவெளியில் அம்பலப்படுத்தி அண்ணாமலைக்கு தர்ம சங்கடமான சூழலை உருவாக்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அண்ணாமலையும் கொஞ்சம் கூட சளைக்காமல் செந்தில்பாலாஜியை சாராய மந்திரி என்றும் ஊழல் அமைச்சர் எனவும் பதிலடி கொடுத்து வருகிறார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு
இப்படிப்பட்ட சூழலில் இவர்கள் இருவரும் ஒரே மேடையில் அதுவும் அருகருகே அமர்ந்திருக்கும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் நடைபெற்ற கிராமிய சுகாதார நிகழ்ச்சியில் அண்ணாமலையும், செந்தில்பாலாஜியும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வு நடைபெற்ற போது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில்பாலாஜி.

மண்ணின் மைந்தர்கள்
அதேபோல் 2011 ஐபிஎஸ் பேட்ஜில் தேர்வாகி பயிற்சிக்கு ரெடியாகி கொண்டிருந்தார் அண்ணாமலை. இருவருமே மண்ணின் மைந்தர்கள் என்ற அடிப்படையில் அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் அழைத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications