TNPSC சேர்மன் பதவி! சைலேந்திர பாபுவுக்கு வயதாகிவிட்டது! ஆளுநர் ரிஜெக்ட் பற்றி அண்ணாமலை புது விளக்கம்
கரூர்: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க ஆளுநர் மறுப்பு தெரிவிப்பது ஏன் என்பது பற்றி பரபரப்பு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழக டிஜிபி பதவியிலிருந்து கடந்த ஜூன் மாதம் ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு இப்போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் சொற்பொழிவுகள் ஆற்றி தனது ஓய்வுக்காலத்தை கழித்து வருகிறார். இவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்து. 8 பேரை புதிய உறுபினர்களாகவும் நியமித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்புதல் கோரியது அரசு.

இதனை ஏற்க மறுத்த ஆளுநர் ரவி அரசு அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பினார். மீண்டும் அரசுத் தரப்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கக் கோரி கோப்பு அனுப்பப்பட்டது. அதனையும் ஆளுநர் ரவி ஏற்க மறுத்து நிராகரித்தார். இதனிடையே இன்று ஆளுநருகு எதிராக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளது தமிழக அரசு.
இத்தகைய சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் நிராகரிப்பு பற்றி புதிய விளக்கம் அளித்துள்ளார். அதாவது சைலேந்திர பாபுவுக்கு வயதாகிவிட்டது என்றும் தற்போது அவருக்கு 61 வயது என்பதால் அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக கொண்டுவந்தால் இன்னும் 8 மாதமோ ஒரு வருடமோ தான் அவர் அந்த பதவியை வகிக்க முடியும் என்றார். அதுமட்டுமல்ல சைலேந்திர பாபுவை எதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. சேர்மனாக தேர்வு செய்தார்கள் என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் அண்ணாமலை கூறினார்.
அதே போல் உறுப்பினர்கள் நியமனத்திலும் குளறுபடிகள் இருப்பதாகவும் சிவக்குமார் என்ற உறுப்பினரை அவர் வேலை பார்த்த கல்லூரி நிர்வாகமே நீக்கியிருக்கும் சூழலில் அவரை எப்படி டி.என்.பி.எஸ்.சி உறுப்பினராக ஆளுநர் நியமிக்க முடியும் என வினவினார். தமிழக அரசின் அதிகாரத்தில் ஆளுநர் குறுக்கிடவில்லை என்றும் தமிழக அரசு தான் மத்திய அரசின் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதாகவும் சாடினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன விவகாரத்தில் ஆளுநர் தன் கடமையை தான் செய்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications